( அஸ்ஹர் இப்றாஹிம்) "நீதிக்கான அனுகல்" எனும் தொனிப்பொருளில் நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் ஊடான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் விஷேட நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் ஒரு அங்கமாக கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும் குறித்த நடமாடும் சேவையானது சிறப்பாக இடம்பெற்றது. குறித்த நடமாடும் சேவையினூடாக பொது மக்களைப் பாதிக்கும் சட்டங்கள் குறித்து மக்களுக்கு அறிவூட்டுதல், நல்லிணக்கம் பற்றிய மக்களுக்கான தெளிவூட்டல், காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பான ஆலோசனை, பிறப்பு-திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளல், காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் சேவைகளை வழங்குதல் ஆகியவை சம்பந்தமான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் நீதியமைச்சின் கீழ் இயங்கும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சொத்துக்களை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டு கொடுப்பணவாக சுமார் 553 பயனாளிகளுக்கான காசோலையும் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நீதியமைச்சர் கௌரவ. அலி சப்ரி, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதி இராஜாங்க அமைச்சர் கௌரவ. ஜீவன் தொண்டமான்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் , முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ. காதர் மஸ்தான் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து நிதியமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்ன , தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கத்திற்கான பணிப்பாளர் நாயகம், இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி. நஸீமா முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments