மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்தியத்தில் அண்மைக்காலங்களில் அதிகரித்துவரும் யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி பொதுமக்களின் உடமைகளையும், சொத்துக்களையும் பாதுகாக்கும் நோக்கில் யானைவேலி அமைத்தல் தொடர்பில் வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விளக்கமளித்து உடனடியாக அந்த வேலிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இன்று (26) அம்பாறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்டம், கல்முனை கிரீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டம், மருதமுனை பிரான்ஸ் சிட்டி சுனாமி வீட்டுத்திட்டம், குடுவில், வாங்காமம், நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்கள் அடங்களாக அம்பாறையின் ஏனைய பிரதேசங்களில் யானையின் கெடுபிடி அதிகமாக உள்ளதையும், இதனால் பொதுமக்களின் அன்றாட இரவுவேளை பீதியில் உள்ளதையும் எடுத்துரைத்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உடனடியாக மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க வேண்டி மிக அவசரமாக யானை வேலிகளை அமைக்குமாறு இராஜாங்க அமைச்சரை கேட்டுக்கொண்டார்.
இந்த கலந்துரையாடலில் வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், டாக்டர் திலக் ராஜபக்ஸ, மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் டீ. வீரசிங்க, அம்பாறை அரசாங்க அதிபர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌஸாத், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் ஜெமீல் காரியப்பர், அம்பாறை பிரதேச செயலாளர் அடங்களாக உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments