இப்போதைக்கு எரிபொருள் விலை குறையாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் பேசிய அவர்,
எரிபொருள் கொள்வனவு என்பது அரசாங்கம் செய்யும் மிகப்பெரிய கொள்வனவாகும். இதில் அமைச்சர் நேரடியாக தொடர்புபட மாட்டார். விசேட நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவை ஜனாதிபதியே நியமிப்பார். மத்திய வங்கி மற்றும் திறைசேரி உறுப்பினர்களும் உள்ளனர். அவர்கள் எடுக்கும் தீர்மானமே இறுதியானது.
மேலும் நாட்டின் தற்போதுள்ள வாழ்வாதார நெருக்கடியில் எரிபொருள் விலை உயர்வு தாக்கத்தை செலுத்தும் என்பது உண்மையே. வாழ்வாதார குழுவின் போது ஆழமாக ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
டொலருக்கான பெறுமதி அதிகரித்தால் அது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் தாக்கும். எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டால் அது முழுமையான வாழ்வாதாரத்தை பாதிக்காது மாறாக சிறிய அளவிலான நெருக்கடி நிலைமை மட்டுமே உருவாக்கும் என்பதை கருத்தில் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்தோம்.
எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என விமர்சிக்கும் நபர்கள் அதற்கான தீர்வையும் முன்வைக்க வேண்டும். வெறுமனே விமர்சனத்தை மாத்திரம் முன்வைக்க முடியாது. மக்கள் முடிந்தளவு தமது வாகனங்களை அனாவசியமாக பயன்படுத்துவதை நிறுத்துங்கள், அத்தியாவசிய சேவைகள் இயங்கட்டும், ஆனால் தனியார் வாகனங்களின் பயன்பாட்டை முடிந்தளவு குறையுங்கள்.
பொருளாதார ரீதியில் மிகப்பெரிய நெருக்கடியில் நாம் உள்ளோம். ஆகவே நேரடியாக மக்களுக்கு உண்மையை நான் கூறி நிலைமையை தெளிவுபடுத்தவே விரும்புகிறேன்.
அதுமட்டுமல்ல கச்சாய் எண்ணெய் வாங்க எம்மிடத்தில் பணம் இல்லை, தவனைக் கொடுப்பனவுகளில் நாம் இன்றும் பெற்றுக்கொண்டுள்ளோம். திறைசேரியிலும் பணம் இல்லை. இதுவே எமது உண்மையான நிலைமையாகும் என்றார்
0 comments: