நாடு முழுவதும் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் நாளை (25) அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படவுள்ளது. பொசன் தினமான இன்று மக்கள் கூடுவதை தடுக்கவே அரசாங்கம் நேற்று இரவு (23) முதல் நாடு தழுவிய பயணத் தடையை விதித்தது.
இதேவேளை, நாளை காலை முதல் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றாலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று கொரோனா பரவுவதைத் தடுக்கும் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா நோய்த்தொற்று பரவலாக இருப்பதால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும்.
இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் காணப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அந்த பகுதிகளை மட்டும் தனிமைப்படுத்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, பயண கட்டுப்பாடுகளை நீக்கிய போதிலும், பொது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்திற்கு இணங்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.
0 comments: