தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களை விடவும் சமூகத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம் என்று கொவிட் கட்டுப்பாடு தொடர்பான ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
25 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்தி சுமார் 2 ஆயிரத்து 300 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கூறினாலும் அந்த எண்ணிக்கையை விட இரண்டு, மூன்று மடங்கு தொற்றாளர்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாது சமூகத்திற்குள் இருக்கலாம் என எண்ணுகிறேன்.
ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரை 44 ஆயிரம் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 25 ஆயிரம் பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி 2 ஆயிரத்து 300 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் போது, அதனை விட இரண்டு, மூன்று மடங்கு தொற்றாளர்கள் சமூகத்திற்குள் இருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.
நாங்கள் சினோபார்ம் தடுப்பூசியை 6 லட்சம் பேருக்கு வழங்கியுள்ளோம். அந்த தடுப்பூசி முடிந்த பின்னர், அடுத்த தொகை வரும் வரை தடுப்பூசி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டியேற்படும் எனவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.
இவேளை, கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சின் தவறுகளே காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இரண்டு அமைச்சர்கள் இருக்கும் நிலையில் அப்படியான பலவீனம் இருக்கின்றதா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதில் வழங்கிய அவர், நானும் அந்த அமைச்சிலேயே இருக்கின்றேன். இதனால், அது பற்றி நான் எதனையும் கூறாமல் விட்டு விடுகிறேன். ராஜாங்க அமைச்சர் என்ற வகையில் அது பற்றி பேசுவது நாகரீகமல்ல என்றார்.
0 Comments