Home » » புத்த சின்னங்களைக் காட்டி நில அபகரிப்பு- அனுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைக்க நிலம் தருவீர்களா?

புத்த சின்னங்களைக் காட்டி நில அபகரிப்பு- அனுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைக்க நிலம் தருவீர்களா?


கௌதம புத்தரின் பௌத்த சின்னங்கள் இருப்பதாக அடையாளம் காட்டி நிலங்களை அபகரிக்கின்றீர்கள். இந்து மன்னர்கள், ஆட்சி புரிந்த பொலநறுவை, அனுராதபுர பிரதேசங்களில் இந்து தாபனம் அமைக்க நூறு ஏக்கர் காணியை தர முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்( ஜனா) கேள்வி எழுப்பியெழுப்பியுள்ளார்.

மேலும் கல்முனை பிரதேச தரம் இறக்கல் போர்ட் சிற்றி பிரேரணைக்கு ஆதரவு பெறவா என்றும் நாடாளுமன்றத்தில் வினவியுள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரித்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், நமது நாடு ஒரு சுந்திரத் தீவு. நமது நாடு இந்து சமூத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முத்து. நமது நாடு உலகுக்கு ஆன்மீக ஒளியைப் பரப்பிய நான்கு மதங்களும் தளைத்தோங்கும் நாடு. நமது நாடு மூப்பு, பிணி, சாக்காடு கண்டு தனது இல்லற வாழ்வில் அழகிய இளம் மனைவியையும் துறந்து தனக்கு ராஜபோகம் தரக்கூடிய அரச சுகபோகங்கள் அனைத்தையும் துறந்து உலகுக்கு ஞான ஒளியினை தன் பரிநிர்வாணம் மூலம் ஏற்படுத்திய கௌதம புத்தரின் ஆன்மீக ஒளியின் பெருமையினை பின்பற்றும் நாடும் கூட.

மூப்பு, பிணி, சாக்காடு கண்டு முத்தி கண்ட கௌதம புத்தருக்கு எதிரி என்று எவருமில்லை. இருப்பவரும் வாழ்பவரும் மனுக்குலத்தவரே. இந்த மண்ணில் வாழ்வது இன, மத, மொழி பேதங்களற்ற ஒரே மனுக்குலமே என்று போதி மர நிழலில் இருந்து பெற்ற ஞானம் மூலம் அறியத் தந்த கௌதம புத்தரை விசுவாசிக்கும் நாட்டில், அந்த விசுவாசம் மாறி மாறி நாட்டை ஆட்சி செய்த அரசுத் தலைவர்களுக்கு உண்மையாக இருக்குமானால், இந்த நாட்டில் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விவாதம் ஒன்று ஏன் தேவை என்பது தான் இன்று என் முன் எழுந்துள்ள பிரதான கேள்வியாகும்.

நம் அரசின் தலைவர்கள் தாம் உதட்டளவில் பேசும் பௌத்த தர்மம், தேசாபிமானம் என்பன தம் உள்ளத்திலிருந்து வெளிவராததன் காரணமாகவே இந்த நாட்டின் உயரிய சபையில் இன்று இந்த விவாதம் நடைபெறுகிறது. இதையிட்டு கௌதம புத்தரின் போதனைகளை மதிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வெட்கமடைவதா, வேதனையடைவதா, துக்கமடைவதா, துயரமடைவதா இல்லை கௌதம புத்தனைப் போல் என் மனைவி பிள்ளைகளை விட்டுத் துறவறம் செல்வதா என்று பல்வேறு சிந்தனைகள் என் மனதைக் குழப்புகின்றது. வேதனைப்படுத்துகின்றது.

ஆட்சி மாறும் போது அமைச்சர்கள் மாற்றம் பெறுவார்கள், அமைச்சின் செயலாளர்கள் மாற்றம் பெறுவார்கள், அரச திணைக்கள, கூட்டுத்தாபன நியதிச் சபைகள் உட்பட அரச இயந்திரம் முற்றிலும் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளருக்குச் சாதகமாக மாறும். கடந்த அரசாங்க காலத்தில் உயர் பதவி பெற்றவர்கள் ஏன் அகில இலங்கைச் சேவை ஆளணியினர்கூட பொலிஸ் சேவை இப்படி பல பதவி நிலையில் இருப்பவர்கள் பந்தாடப்படுவார்கள். இது எமது நாட்டின் ஆட்சிமாற்றங்கள் நடைபெறும் பொழுது காணும் சாதாரண காட்சிகள். ஒவ்வொரு ஆட்சியாளரும் தமது பக்க நியாயத்தை தாம் சார்ந்த அலுவலர்கள் சார்பில் நியாயப்படுத்துவார்கள்.

இன்று எமது நீதி அமைச்சர் அலி சப்ரி கூட பிரதம நீதியரசராவதற்கு பதவியிலிருந்து சிரானி பண்டாரநாயக்கா நீக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல எனவும், பிரதம நீதியரசர் மொஹான் நீதியரசர் அந்தப்பதவியிலிருந்து நீக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் ஒரு சட்டத்தரணிக்கே உரிய வாதத்திறனோடு நியாயப்படுத்துகிறார்.

இவை ஆட்சி மாற்றங்கள் நடைபெற்ற போது பெரும்பான்மை இன மக்களுக்கிடையே, பௌத்த சிங்க மக்களுக்கிடையே ஏற்படும் அரசியல் பழிவாங்கல்களினதும் அவற்றுக்கான நிவாரணம் வழங்குவது என்பதும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் வகையில் ஓரிரு உதாரணங்களாகும். தமது இனத்துக்குள்ளே, தமது மதத்துக்குள்ளே, மாறி மாறி ஆட்சியமைக்கும் அரசியல் தலைவர்களால் அரசியல் பழிவாங்கல்கள் ஏற்படுவதென்றால், அர்த்த புஸ்டியுள்ள அதிகாரப்பகிர்வுக்காகவும் புறக்கணிப்புக்கு எதிராகவும் சமத்துவத்துக்காகவும் போராடும் எமது மக்கள் எத்துணை பழிவாங்கப்பட்டிருப்பார்கள்.

இத்தகைய பழிவாங்கல்களுக்காக நியாயம் கேட்க முடியாத நாதியற்ற சமுதாயமாக எமது மக்கள் எவ்வளவு காலம் வாழ்ந்திருப்பார்கள். சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக தேசியத்துக்கு உழைத்த எம் இனத் தலைவர்கள் கூட இன்று உரிய தேசிய மரியாதை இன்றி புறக்கணிக்கப்படுகின்றார்கள். ஆனால், எம் இனத்தின் பெயரில் அரசிற்கு ஆதரவு வழங்கும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு எலும்புத் துண்டுகளுக்கும் குறைவான மரியாதையை மக்கள் வழங்குகின்றார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆட்சியாளர்களுக்குச் சார்பாக அரச சட்டங்கள் வளைந்து கொடுக்கின்றன. கிருசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் நீதிமன்றத்தின் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்ட கைதி ஒரு பெரும்பான்மை இன இராணுவச் சிப்பாய் என்பதனால் அவர் அரசின் பொது மன்னிப்புக்கு ஆளாகின்றார். இப்படி எத்தனையோ இராணுவத்தினர் நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைத் தீர்ப்பிலிருந்து பொது மன்னிப்பு பெற்றுள்ளனர்.

ஆனால், தாயை இழந்து தனியாக உறவினர் தயவில் வாழும் தன் மகளின் வாழ்வை காப்பாற்றுவதற்காக ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பு அளியுங்கள் என்று முழந்தாளில் நிற்காத குறையாக அகிலமே வேண்டியும் கூட ஆட்சியாளர்களின் அஹிம்சைக் கண் திறக்கவில்லை. தென்னாபிரிக்காவின் தேச பிதாவான நெல்சன் மண்டேலாவை ஏகாதிப்பத்திய அரசு 26 வருடங்கள் சிறையில் வைத்து 26வது வருடத்தில் விடுதலை செய்தது. இங்கு 26 வருடங்களுக்கு மேலாக விசாரணைகளின்றி வழக்குத் தாக்கலின்றி வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் எத்தனை அரசியல் கைதிகள் சிறையில் வாடுகின்றனர்.

தமது வாழ்வின் இளமையைத் தொலைத்துள்ளனர். இவர்கள் செய்த குற்றம் என்ன? தன் இனத்தை தன் மொழியை தன் மண்ணை நேசித்ததா? இது போன்ற ஒரு அரசியல் பழிவாங்கல் உலகின் இராணுவ ஆட்சி நடக்கும் நாட்டில் கூட நடந்ததாக, நடப்பதாக அண்மைய உலக வரலாறுகள் எதுவும் பதிவுசெய்யவில்லை. ஆனால் உலகுக்கு ஜனநாயகத்தைப் போதித்த நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் தாய் என போற்றப்படும், பிரித்தானியாவுக்கு முன்னரேயே சர்வஜன வாக்குரிமையை வழங்கியதாக பெருமை கொண்ட ஆசியப்பிராந்தியத்தில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைப் பேணும் ஒரு முக்கிய நாடான எமது நாட்டில் இத்தகைய பழிவாங்கல்கள் என்று ஓயும்.

இவை ஓயுமா, அல்லது அடுத்த தலைமுறைக்கும் இது நகர்த்தப்படுமா? அரச உயர் பதவி நியமனங்களில் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். அண்மைய இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சைகளின் முடிவு இதற்குத் தகுந்த சான்றாகும். மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் கடந்த முறை 69 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அதில் ஒரு பரீட்சாத்தி கூட தமிழ் பேசுபவர் இல்லை என்பதே ஒரு உதாரணமாகும். இது ஒரு பழிவாங்கலுமாகும்.

அந்தப்பரீட்சை முடிவுகளின்படி சித்தியடைந்த அனைவருமே பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாவார்களா என்பதைக் கேட்க விரும்புகிறேன். இது ஒரு திட்டமிட்ட பழிவாங்கலாகும். பதவி நியமனங்கள் வழங்கப்படும் போது தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமை அளியுங்கள். உறவுக்கும் இனத்துக்கும் முன்னுரிமையளிக்காதீர்கள். ஒரு காலத்தில் புகழ்பூத்த வெளிநாட்டுச் சேவையாக இருந்த இலங்கை வெளிநாட்டுச் சேவை இன்று அரசியல் நியமனங்களால் அலங்கரிக்கப்பட்டு நிற்கின்றது என்பதற்கு அண்மைய ஜெனீவா மநாடு சரியான முன்னுதாரணங்களாகும்.

எமது நாடு மீண்டும் பண்டைய சிறப்புகளை, பண்டைய பெருமையினைப் பெற வேண்டுமாக இருந்தால் ஆட்சியாளர்கள் கடந்த கால வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவைகள் அனேகம் உண்டு. தவறுகளும் குறைபாடுகளும் கொண்டதுதான் மனித வாழ்க்கை. தவறுகள் இனங்காணப்பட்டு குறைகள் களையப்பட்டு வாழ்க்கையைச் சீராக்க வேண்டியது வாழ்வியலின் தத்துவம். இது தனிமனித வாழ்க்கைக்கு மாத்திரமல்ல நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்.

ஆட்சியாளர்களே, எமது நாட்டின் கடந்த கால வரலாற்றினை நன்கு சீர்தூக்கிப் படியுங்கள் தவறுகள் எங்கு எவ்வாறு எவரால், உருவாக்கப்பட்டது என்பதனைக் கண்டுபிடியுங்கள். அதற்கான தீர்வினை இன மத, மொழி வேறுபாடின்றி நடுநிலையுடன் வழங்குவதற்கு முனையுங்கள். வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாத எவரும் மக்கள் போற்றும் அரசுத் தலைவராக மிளிர முடியாது. இதனை உணர்ந்து உங்கள் தீர்மானங்களை எடுங்கள். அவ்வாறு நீங்கள் தீர்மானம் மேற்கொள்வீர்களாக இருந்தால் அரசியல் பழிவாங்கல் என்ற சொல் இலங்கை அரசியல் வரலாற்றின் அகராதியில் இருந்து பூரணமாக நீக்கப்பட்டுவிடும்.

இந்த நாட்டில் இன்று தமிழ் பேசும் மக்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த அரசியல் பழிவாங்கலுக்கு நல்ல உதாரணமாகும். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த 28 ஆண்டுகளாக அந்தப்பிரதேச செயலகம் தனியாக இயங்கி வந்தது. 40ஆயிரத்துக்கும்அதிகமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டு இருக்கும் அந்தப்பிரதேச செயலகம் இன்று தரம் இறக்கப்பட்டதாக அறிகின்றோம்.

கடந்த கால ஆட்சியில் அது தரம் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அது தவிர்க்கப்பட்டிருக்கிறது, கல்முனை நகரரில் அரசியல் செய்யும் அரசியல்வாதியான ஹரீஸ் எம்.பியின் நடவடிக்கைதான் இது. பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டுமே தவிர தரம் இறக்கப்படக்கூடாது. இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் இறக்கப்பட்டுள்ளது. ஹரீஸ் நாடாளுமன்ற உறுப்பினர், தான் சார்ந்த சமூகத்தின் மரணமானவர்களின் உடலங்கள் எரிக்கப்பட்டிருக்கும் போதே 20வது திருத்தத்துக்கு வாக்களித்து ஆதரவளித்து தன்னுடைய சமூகத்துக்கே துரோகம் செய்தவர்.

இன்னுமொரு சமூகத்துக்கு உதவி செய்வார் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் நாங்கள் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம்கள் இன ஒற்றுமையாக வாழவேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று எங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பெரும்பான்மை ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரத்தின் ஊடாக இந்த வேலையைச் செய்கின்றார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. 20வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்த இவர்கள் பிரதேச செயலகத்தினை தரம் இறக்குவதன் மூலம் எதிர்வரும் காலங்களில் கொண்டுவரப்படவிருக்கின்ற கொழும்பு துறைமுக நகர பிரேரணையிலும் அதரவைப் பெறுவதற்காக இப்படிச் செய்கின்றார்கள் என்று நினைத்துப்பார்க்க வேண்டியதாகயிருக்கிறது.

அதற்கும் மேலாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தொல்பொருள் என்ற ரீதியில் பழிவாங்கப்பட்டு பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அம்பாறை பொத்துவிலிலிருந்து பருத்தித்துறை வரையில் பல ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. கௌதம புத்தரின் பௌத்த சின்னங்கள் இருப்பதாக அடையாளம் காட்டி நீங்கள் அபகரிக்கின்றீர்கள்.

கடந்த காலங்களில் இந்து மன்னர்கள் வாழ்ந்த, ஆட்சி புரிந்த பொலநறுவை, அனுராதபுரம் போன்ற இடங்களில் இந்து சின்னங்கள் இன்னும் இருக்கின்றன. அங்கு நூறு ஏக்கர் காணியைக் கொடுத்து இந்து மத ஸ்தாபனம் அமைக்க உங்களால் இடம் தரமுடியுமா என்று கேட்க விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |