கலை இலக்கியப் பணியில் கிழக்கிற்கும் மலையகத்திற்கும் இடையில் உறவுப்பாலமாக திகழ்ந்த கவிச்சக்கரவர்த்தி நீலாபாலன்(பூபாலரெத்தினம்) இழப்பு தமிழிலக்கியத்துறையில் என்றும் நிரப்பப்டாத வெற்றிடமாகும் என அம்பாறை பாண்டிருப்பை தளமாகக்கொண்டு இயங்கிவரும் அகரம் கலைக்கழகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது. அகரம் கலைக்கழகத்தின் தலைவர் செ.துஜியந்தன், செயலாளர் வி.சரன்தாஸ் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்ட்டிருப்பதாவது.
பிரபல கவிஞர்களில் ஒருவராக திகழ்ந்த கவிஞர் நீலாபாலன் தனது 73வயதில் திங்கட்கிழமை இயற்கையெய்தினார். கிழக்கில் கல்முனையை பிறப்பிடமாகக்கொண்ட பூபாலரெத்தினம் எனும் இயற்பெயரைக் கொண்டவர். திருமணத்தின் பின் பதுளை வெலிமடையில் வசித்துவந்தார். ஆரம்பத்தில் கல்முனை பூபால் எனும் பெயரில் எழுத்துத்துறைக்குள் நுழைந்தவர். பின்நாட்களில் தனக்கு மிகவும் பிடித்த நீலாபாலன் எனும் புனைபெயரில் கவிதை, சிறுகதை, விமர்சனம், ஆய்வுகட்டுரைகள், மேடைநாடகங்கள், மெல்லிசைப்பாடல்கள், போன்ற பல்வேறு கலை இலக்கியச் செயற்பாடுகள் தொடர்பில் ஏராளமான படைப்புக்களை வெளியிட்டுள்ளார்.
இலக்கியப்பரப்பில் இரவது படைப்புக்கள் வெளிவராத பத்திரிகைகள் இல்லையென்றே கூறவேண்டும். கவிஞர் நீலாபாலனின் தொடர்ச்சியான இலக்கியச் செயற்பாடுகள் இளம் படைப்பாளிகளுக்கு ஓர் உந்து சக்தியாகவும் அமைந்திருந்தன. கிழக்கில் இருந்து அகரம் கலைக்கழகத்தின் வெளியீடாக இரு மாதங்களுக்கொரு முறை வெளிவரும் விருந்து சிற்றிதழுக்கு தொடர்ச்சியாக ஆக்கங்களை எழுதிவந்தவர் கச்சக்கரவர்த்தி நீலாபாலன். இவரது பன்முக ஆளுமைத்திறன் இலங்கையின் தமிழிலக்கியத்துறையில் என்றும் நிரப்பப்படாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கும், கலை இலக்கிய நண்பர்களுக்கும் அகரம் கலைக்கழகம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
0 Comments