அடிப்படைவாத போதனைகளே ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் தலைவன் என, நவ சிங்கள ராவய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
குர்-ஆனில் காணப்படும் சில பகுதிகள் தற்கொலைத் தாக்குதல்களை தூண்டும் பிரிவினைவாத சிந்தனையை ஊக்குவிப்பதாகவும், இதுவே சஹ்ரான் போன்றவர்கள் உருவாவதற்கு காரணம் எனவும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஏதாவது ஒரு அரசியல் கட்சி, தரப்பு அல்லது குழு சஹ்ரானுக்கு நிதியுதவி அளித்திருக்கலாம். எனினும் சஹ்ரான் மற்றும் அவரது சகாக்கள் குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு என்ன காரணம் என்ற விடயம் சமூக மட்டத்தில் இதுவரை கலந்துரையாடலுக்கு வரவில்லை.
நாம் இந்த விடயம் குறித்தே ஆராய்ந்து பார்க்க வேண்டும். சஹ்ரான் போன்றவர்கள் ஏன் உருவானார்கள், அவர்களின் நோக்கம் என்ன, என்ன காரணம்? என்ற விடயம் குறித்து நாம் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவில்லை.
சஹ்ரானுக்கு தலைவர் ஒருவர் இருந்தார். அடிப்படைவாத போதனையே அவரது தலைவர்.
குர்-ஆனில் சில பகுதிகளை கற்பிக்கும், தற்கொலைத் தாக்குதல்களை தூண்டும் அந்த பிரிவினைவாத சிந்தனையே சஹ்ரானின் தலைவர். இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இதன் பின்னணியில் பலர் இருக்கலாம். எனினும் இஸ்லாமியத்தில் காணப்படும் பிரிவினைவாதமே சஹ்ரானின் தலைவர். இதற்கான காரணத்தை ஆராயந்து கண்டறியாமல் இந்த நாட்டில் சஹ்ரான் போன்ற மனிதர்கள் உருவாவதை தடுக்க இயலாது.
தற்காலிக இடைவேளையை எடுத்துக்கொள்ள முடியும். எனினும் இது நீண்டகால தீர்வாக அமையாது. புலனாய்வுப் பிரிவு, பொலிஸாரை அனுப்பி தற்காலிகமாக இதனை நிறுத்தலாம், எனினும் நீண்டகால தீர்வாக இது அமையாது.
இஸ்லாமிய மத பிரிவினைவாதத்தை கற்பிக்கும் செயற்பாடுகள் தொடர்வதால் அதனை தடுக்க இயலாது. மதரசாக்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றார்.
0 comments: