தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார வழிமுறையினை பின்பற்றியவாறு இந்த போராட்டம் இன்று காலை காந்தி பூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை அரசே அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க என்னும் தொனிப்பொருளில் வடக்கு, கிழக்கு மாகாண பொது மக்கள், சிவில் அமைப்புகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் என்பன இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.
இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்து, தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குங்கள் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதன்போது, இந்த நாட்டில் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமா, இந்த நாட்டின் சட்டங்கள் ஒரு இனத்திற்கு மட்டுமா, அரசியல் கைதிகளின் விடுதலையில் பாரபட்சம் காட்டுவது ஏன் போன்ற பல்வேறு கேள்விகள் அரசாங்கத்திடம் எழுப்பப்பட்டன.
குறித்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஷ், முன்னாள் அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
0 Comments