முன்பள்ளி மற்றும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் திகதி இரண்டு வார காலத்துக்குள் அறிவிக்கப்படும்.
கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிக் கொள்ள அனைத்து தரப்பினரும் அரசியல் வேறுபாடின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டு பிரதான தேசிய பரீட்சைகள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய நடத்தப்பட்டன.
2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாணத்தை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் பாடசாலை திறக்கப்பட்டன. கனிஷ்ட மற்றும் உயர்தர பிரிவு மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கை சுகாதார வழிமுறைகளுக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சமூக இடைவெளி பேண வேண்டும் என்ற காரணத்தினால் முன்பள்ளி மற்றும் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவில்லை.
ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து வியாழக்கிழமை சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.
முன்பள்ளி மற்றும் ஆரம்ப பிரிவு கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் திகதி இரண்டு வார காலத்துக்குள் அறிவிக்கப்படும்.
எவ்வாறாயினும் ஜனவரி மாதம் பாடசாலை கற்றல் நடவடிக்கை மற்றும் மேலதிக வகுப்பு ஆகியன முழுமையாக ஆரம்பிக்கப்படும். புதிய வருடத்தில் புதிய கல்வி கொள்கை செயற்படுத்தப்படும்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் கல்வித்துறை பல சவால்களை எதிர்க் கொண்டுள்ளது. அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள அனைவரும் அரசியல் கட்சி பேதங்களை துறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
0 comments: