நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. விடுமுறை தினங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பின்வேற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தத் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கிறிஸ்மஸ் விடுமுறை தினங்களில் கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்வதை மட்டுப்படுத்தல், பொருட்கள் வாங்குவதற்கு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்லல், வீடுகளுக்கு அருகில் உள்ள மிகக் குறைவான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் கடைகளுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்தல், பெருமளவில் மக்கள் கூடும் வகையில் கேளிக்கை நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதைத் தவிர்த்தல்,
கிறிஸ்மஸ் மற்றும் பண்டிகைக் காலங்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவிக்கும் போது சமூக இடைவௌியைக் கடைப்பிடித்தல், வீட்டிலுள்ள வயோதிபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாவதைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல், வீடுகளுக்கு உறவினர், நண்பர்களின் வருகையை மட்டுப்படுத்தல்,
பொருட்கொள்வனவின் போது வரிசையில் நிற்பவர்களுக்கு இடையில் இடைவௌி இருப்பதை உறுதிப்படுத்தல், முடியுமான வரை ஒன்லைன் மூலமான கொள்வனவில் ஈடுபடல், வௌியிடங்களுக்கு சுற்றுலா செல்வதைத் தவிர்த்தல், வீட்டிலிருந்து வௌியில் செல்லும் சந்தர்ப்பங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்வதுடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றல் வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments