கல்முனை மாநகர பொதுச் சந்தை பகுதியை இராணுவத்தினர் பொது சுகாதார அதிகாரிகளுடன் இன்று திங்கட்கிழமை (27) சுற்றிவளைத்து அங்குள்ளவர்களுக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்டபோது அங்கிருந்த சில வர்த்தகர்கள் கடைகளை அவசரமாக மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர். அதேவேளை அங்கு 200 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கல்முனை தெற்கு சுகாதாரப் பிரிவில் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் இன்று திங்கட்கிழமை கல்முனை மாநகர பொதுச்சந்தையை காலையில் இராணுவத்தினர் திடீரென சுற்றிவளைத்து சந்தைப் பகுதிக்கு செல்லவோ வெளியேறவோ முடியாதவாறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .
இந்த நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணனின் நேரடி கண்காணிப்பில் பொதுசுகாதார அதிகாரிகள் அந்த பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர்கள் உட்பட 200 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை எழுமாறாக மேற்கொண்டனர். இதன்போது சந்தை வர்த்தக சங்கத்தினர் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர்.
இருந்தபோதும் சில வர்த்தகர்கள் திடீரென கடைகளை மூடிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றதுடன் 200 பேருக்கு மேற்கொண்ட இந்த பி.சிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் 27 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் இவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்புபட்வர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இன்று திங்கட்கிழமை (27) காலை 10 மணிவரையில் கல்முனை தெற்கு சுகாதார பிரிவில் 144 பேருக்கும் கல்முனை வடக்கு சுகாதார பிரிவில் 11 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments