உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று, கடந்த ஆண்டு சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் தோற்றம் பெற்றது.
தற்போது இந்த வைரஸ் 215இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரஸ் தொற்று குறித்து தகவல்களை பரவ விடாமல் சீனா ஆரம்பத்தில் தடுத்து விட்டது என அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்தது.
எனினும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்திருந்தது. இந்த விவகாரம் கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் தீர்மானிக்கும் அமைப்பான உலக சுகாதார சபை கூட்டத்தில் எதிரொலித்தது.
அதில் கலந்துகொண்ட 100இற்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்துவதற்கு தங்களது ஆதரவை தெரிவித்தன.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கான சீன தூதர் ஜாங் ஹன்குய் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் சுதந்திரமான விசாரணையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் முன்கூட்டியே குற்றம் சுமத்தும் மன நிலையில் இந்த விசாரணையை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடனும் சரி, உலக நாடுகளுடனும் சரி, சீனா ஒத்துழைக்க தயாராக இருக்கிறது என்றும் அது தங்கள் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கொரோனா வைரசின் தோற்றத்தை தீர்மானிப்பது ஒரு அறிவியல் பிரச்சினை என்றும் அது அரசியல் பிரச்சினை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments: