( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி பாலம் அருகிலுள்ள தோணா பிரதேசம் பன்னெடுங்காலமாக குப்பை கூளங்கள் கொட்டப்பட்டு பிரதேச மக்களுக்கு சுகாதார ரீதியில் சீர்கேடுகளையும் , தொற்று நோய்கள் பரவும் மற்றும் டெங்கு நுளம்புகள் விளையும் இடமாகவும் காணப்பட்டது.
இந்த இடத்தை, கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது 20ம் வட்டார உறுப்பினர் தொழிலதிபர் எம்.வை.எம். ஜஃபர் அவர்களின் அயராத முயற்சியினால் மக்களின் பங்களிப்புடன் சுத்தம் செய்து அழகு படுத்தப்பட்டு, மக்களின் பொழுதுபோக்கு தலமாக மாற்றியமைக்கப்பட்டதுடன் இவ்விடத்தில் கொட்டப்படும் குப்பை கூளங்களை சேகரிக்கவென ஞாயிறு மற்றும் போயா தினம் தவிர்ந்த ஏனைய நாட்களில் தினமும் காலை 6:30 முதல் காலை 7:30 வரையான 01 மணி நேரம் கல்முனை மாநகர சபையின் கழிவகற்றல் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டும் வருகின்றது.
கடந்த 5 மாதங்களுக்கு மேல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த குப்பை சேகரிப்பு வழிமுறையானது பாரிய வெற்றி அளித்துள்ள நிலையில், அதனை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் ஓரிருவர் மேற்கொள்ளும் முறையற்ற நடவடிக்கைகளால் அனைவரும் பாதிக்கப்பட்ட வேண்டி ஏற்பட்டது..
அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த கடந்த ஞாயிறு விடுமுறை தினத்தில் பாலம் அருகில் வீசப்பட்டு வரும் கழிவுகளுக்கு உரிய சொந்தக்காரரை கையும் மெய்யுமாக கண்டுபிடித்து அவர் மூலமாக உரிய இடம் துப்பரவு செய்யப்பட்டது.
இது இப்படியான பொது இடங்களில் கழிவுகளை கொட்டி அசிங்கப்படுத்துவோருக்கு சிறந்த பாடமாக அமைய வேண்டும் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
0 comments: