கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் நியூசிலாந்தில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறிய சுகாதாரத்துறை மந்திரி பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் 25 ஆம் திகதி அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரியான டேவிட் கிளார்க் ஊரடங்கு உத்தரவை மீறி தனது குடும்பத்துடன் கடற்கரையில் காரில் உலா வந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள் டேவிட் கிளார்க்கை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டனர்.
இதையடுத்து தனது தவறை ஒப்புக்கொண்ட சுகாதாரத்துறை மந்திரி டேவிட் கிளார்க், அதற்காக வருத்தம் தெரிவித்ததோடு பிரதமர் ஜெசிந்தாவிடம் தனது ராஜினமா கடிதத்தை வழங்கினார்.
ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ஏற்கவில்லை. அதே சமயம் அவர் இணை சுகாதாரத்துறை மந்திரியாக பதவியிறக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து பிரதமர் ஜெசிந்தா கூறுகையில், “டேவிட் கிளார்க் செய்த குற்றத்துக்கு அவரை நானே பதவி நீக்கம் செய்திருப்பேன். ஆனால் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க அவரது பங்களிப்பு தேவை என்பதால் அவரை பதவியிறக்கம் செய்துள்ளேன்” என கூறினார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது வல்லரசு நாடுகளையே ஆட்டங்காண வைத்துள்ளது. 200 நாடுகளுக்கு மேல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா பிரான்ஸ் ஸ்பெயின் பிரித்தானியா போன்ற நாடுகள் பெரிதும் பாதித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவதற்காக பல நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: