யாழில் தொடர்ந்து அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் ஆலோசனையை வழங்கவுள்ளதாக கூறியிருக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,
யாழ்.மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கண்காணிக்கப்படுபவர்களுக்கு பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டு ஆபத்தில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்பே ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிபார்சை வழங்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் இன்று காலை மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த 4 மாவட்டங்களில் சமூக மட்டத்தில் கண்காணிக்கப்படுபவர்களுக்கு 2ம் கட்ட பரிசோதனை அடுத்த சில நாட்களில் நடாத்தப்படவுள்ளது. இதன்போது தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்படாதவிடத்து,
அடுத்தவாரமே ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிபார்சினை வழங்க தீர்மானித்துள்ளோம். ஆனால் யாழ்.மாவட்டத்தில் 17 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், 320 பேர் சமூக மட்டத்தில் காண்காணிக்கப்படுகின்றனர்,
1200 வெளிநாட்டவர்கள் உள்ளனர். இந்நிலையில் கண்காணிக்கப்படுபவர்களில் 140 பேருக்கு பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது. மற்றையவர்களுக்கும் பரிசோதனை நடாத்தப்படும். அதன் ஊடாக சமூக மட்டத்தில் ஆபத்தில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்பே ஆளுநர் மாவட்ட செயலருடன் கலந்துரையாடி ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஆலோசனையை வழங்க முடியும் என்றார்.
0 comments: