கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் எந்த வகையிலும் ஒத்திவைக்கப்பட மாட்டாது எனவும் அப்படியான தீர்மானம் எதனையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை எனவும் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இம்முறை போன்று கடந்த முறையும் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்கள் துரதிஷ்டவசமான அனுபவத்தை எதிர்நோக்கினர்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் காரணமாக உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மாத காலம் இல்லாமல் போனது. இதனால் ஏற்பட்ட அழுத்தம் பாரதூரமானது.
கல்வி தொடர்பான எந்த தீர்மானமாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு அழுத்தங்களை குறைக்கக் கூடிய தீர்மானங்களாக அவை இருக்குமே அன்றி கூடிய அழுத்தங்களை கொடுக்கும் தீர்மானங்களாக இருக்காது.
இதனால், உயர் தரப் பரீட்சைகளை எந்த வகையிலும் ஒத்திவைக்க போவதில்லை. அதேவேளை சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு விட்டன. அவற்றை மீளாய்வு செய்து புள்ளவிபரங்களை உள்ளடக்க வேண்டிய வேலை மாத்திரமே எஞ்சியுள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலத்தில் அதனை செய்து முடித்து, முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.35 அதிகாரிகளால் 14 நாட்களுக்கு இந்த பணிகளை நிறைவு செய்ய முடியும். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது இந்த பணிகளை நிறைவு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதனால் ஹொட்டல் ஒன்றை ஒதுக்கி, அதில் இருந்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பணிகளை நிறைவு செய்து, ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் தினத்தில் இருந்து இரண்டு வார காலம் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும் என தகவல் தொழிநுட்பம், தொடர்பாடல், உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கல்வி மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அனுசரணையுடன் கட்டணமின்றி இணையத்தளம் வழியாக தொலைக் கல்வியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பந்துல குறிப்பிட்டுள்ளார்.
0 comments: