கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை மற்றும் பொரலஸ்கமுவ பகுதிகளைச் சேர்ந்த இரு தொற்றாளர்களால் பாரிய அச்சம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் எவ்வகையான கண்காணிப்புக்கும் உட்படாத சமூக கட்டமைப்புக்குள் கண்டறியப்பட்டதால் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
மீன் வியாபாரி..
பிலியந்தலை பகுதியில் அடையாளம் காணப்பட்ட நபர், மீன் வர்த்தகர் எனவும் அவருக்கு பேலியகொடை மீன் சந்தையுடன் நேரடியான தொடர்புகள் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
அதன்படி நேற்று முதல் பேலியகொடை மீன் சந்தை 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதுடன், மீன் சந்தை வர்த்தகர்கள், சேவையாளர்கள் கொரோனா குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் குறித்த நபர் வீடு வீடாக சென்றும், தனது வர்த்தக நிலையம் ஊடாகவும் மீன் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அவரிடம் மீன் கொள்வனவு செய்தவர்களை தனிமைப்படுமாறு சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர்.
அத்துடன் மீன் வர்த்தகருடன் அப்பகுதியில் நேரடி தொடர்பில் இருந்த 11 பேரை பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தியுள்ள சுகாதாரத் துறையினர், அப்பகுதியில் 15 குடும்பங்களை சேர்ந்த 74 பேரை தனிமைப்படுத்தியுள்ளனர்.
இரண்டாவது நபர்...
இதேவேளை பொரலஸ்கமுவ பகுதியில் இருந்து திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனா தொற்றிருப்பது தெரியவந்ததால் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த நபர் கொட்டாவ - பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு குருதி மாற்றத்துக்காக அடிக்கடி சென்றுவருபவர் என தெரியவந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் இருந்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலைக்கு ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 114 ஆவது தொற்றாளர் சென்றுவந்திருந்தார். இதன் பின்னணியில் குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.
இந் நிலையில், குறித்த தனியார் வைத்தியசாலையும் மூடப்பட்டு அங்கு சேயைாற்றிய வைத்தியர்கள் ஊழியர்கள் உட்பட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஸ்ரீலங்காவில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: