Home » » தாவடி கிராமம் விடுவிக்கப்படுகிறது

தாவடி கிராமம் விடுவிக்கப்படுகிறது

யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்கேற்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் வட்டுக்கோட்டையில் தங்கியிருந்த நிலையில் அவர்கள் 20 நாள்களின் பின்னர் கண்டறியப்பட்டு நேற்றைய தினம் வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
யாழ்ப்பாணத்தில் முதலாவது நோயாளி இனங்காணப்பட்ட தாவடிக் கிராமம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. அந்தக் கிராமம் நாளைமறுதினம் திங்கட்கிழமை முற்றாக விடுவிக்கப்படவுள்ளது.
மேலும் வடக்கு மாகாணத்தில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 300இற்கும் மேற்பட்டவர்களும் நாளைமறுதினம் திங்கட்கிழமை கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்கேற்ற 346 பேரை வடக்கு மாகாணத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தினோம். ஆராதனையில் பங்கேற்ற மேலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் வட்டுக்கோட்டையில் தங்கியிருந்த நிலையில் அவர்களும் நேற்றைய தினம் வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தியுள்ளோம்.
அதன்மூலம் ஆராதனையில் பங்கேற்ற 356 பேரை வடக்கு மாகாணத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தியுள்ளோம்.
அத்துடன், சுவிஸ் போதகருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு வெலிகந்தை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏனைய 14 பேரும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஏப்ரல் 2ஆம் திகதி பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் பரிசோதனை இடம்பெற்று 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மீதமுள்ள 14 பேரும் மேலும் 21 நாள்கள் அதாவது ஏப்ரல் 23ஆம் திகதிவரை தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீளவும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளவர்களில் 72 பேருக்கு இதுவரை பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.
மேலும் இன்று ஏப்ரல் 11ஆம் திகதி சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 10 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |