-செ. ஞானச்செல்வன்-
மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த பதினொரு வயது சிறுவன் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு கல்லடி மாரியம்மன் கோயில் வீதியை வசிப்பிடமாக கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் வயிற்றோட்டம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வியாழக்கிழமை சிகிட்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த குடும்பத்தில் இரண்டாவது மகனான 11 வயதுடைய மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்று வந்த சிறுவனே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இவர்கள் கடந்த சனிக்கிழமை மீன் வியாபாரியிடம் கணவாய் மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டதன் பின்னரே இவ்வாறு சுகயீனமுற்றிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஏனைய நால்வரும் தொடர்ந்தும் சிகிட்சை பெற்று வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசாரும் காத்தான்குடி பொலிசாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: