பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய குற்றப்புலனாய்வுத்துறையினர் அவரது வீட்டிற்க்கு சென்றபோதும் அவர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி விற்பனை மோசடி தொடர்பில் நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதிவானால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பத்தரமுல்லையில் உள்ள வீட்டுக்கு இன்று குற்றப்புலனாய்வுத்துறையினர் சென்றிருந்தனர்.
எனினும் அங்கு ரவி கருணாநாயக்க இருக்கவில்லை.
இன்று காலை 7 மணிக்கு அங்கு சென்ற குற்றப்புலனாய்வுத்துறையினர் ரவி கருணாநாயக்கவை கைதுசெய்வதற்காக சுமார் 45 நிமிடங்கள் வீட்டுக்கு வெளியில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட 8 ஆவது சந்தேகநபரான அர்ஜூன் அலோசியஸின் பிடிஎல் நிறுவனப்பணிப்பாளர் முத்துராஜா சுரேந்திரன் இன்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் உட்பட்ட மேலும் 8 பேர் கைதுசெய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments