இலங்கையில் தங்கியுள்ள பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இலங்கையை விட்டு நாடு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
வணிக விமானங்கள் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கான பயணங்களை தொடர்ந்தும் மேற்கொள்கின்ற நிலையில் அவற்றின்மூலம் தமது பிரஜைகள் நாடு திரும்பமுடியும் என்று உயர்ஸ்தானிகரம் கோரியுள்ளது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் இது தொடர்பில் டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நாளை லண்டன் செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் 100க்கும் அதிகமான ஆசனங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அவசியம் ஏற்பட்டால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான வீசாக்களை ஏப்ரல் 12வரை நீடிக்கமுடியும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளமையையும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே ஏப்ரல் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துக்கு சென்று கடவுச்சீட்டுக்களை உறுதிப்படுத்திய பின்னர் விமானநிலையத்துக்கு செல்லமுடியும் என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இலங்கையின் விருந்தகங்கள் வெளிநாட்டவர்களை தமது விருந்தகங்களில் இருந்து அனுப்ப முயற்சிப்பதாகவும் சில இடங்களில் அவர்கள் தொந்தரவுகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.
0 comments: