Home » » அனுராதபுரம் சிறைக்குள் வன்முறை - அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் - ஒருவர் பலி

அனுராதபுரம் சிறைக்குள் வன்முறை - அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் - ஒருவர் பலி


அனுராதபுர சிறைச்சாலையில் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளமையினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர முயற்சியில் அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதையடுத்து அங்கு குழப்ப நிலைமை ஏற்பட்டது.
அங்குள்ள ஏனைய கைதிகள் தமக்கு பாதுகாப்பு இல்லையென சிறைக்கூடங்களை தகர்த்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.
தம்மை விடுதலை செய்யுமாறு கோரி சுமார் 900 கைதிகள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வானத்தை நோக்கி அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவத்தினால் பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய தகவலின்படி அதிரடி படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

More .....

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பாதுகாப்புக் கோரி ஏற்பட்டுத்தப்பட்ட முரண்பாட்டை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளைப் பாதுகாக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவிக்கையில், "இன்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சில கைதிகள் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏனைய கைதிகள் தமக்கான மருத்துவப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தம்மை விடுவிக்குமாறு கோரி சிறைக்காவலர்களுடன் முரண்பட்டதாக அறியமுடிகின்றது.

இதன் காரணத்தினால் கைதிகள் சிறைக் கூடங்களின் கதவுகளை உடைத்து பிரதான கதவினை உடைக்க முற்பட்டபோது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்காரணமாக மூன்று கைதிகள் படுகாயமடைந்த நிலையில் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சூழலில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உடனடியாக உறுதிப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பை வழங்க ஆவன செய்யவேண்டும்.

அத்துடன் சிறைச்சாலைக்குள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்படுவதால் அங்குள்ள கைதிகள் அனைவரும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள கைதிகள் அனைவரையும் மனிதர்களாக எண்ணி மனிதாபிமானமாக இந்த அரசாங்கம் நடத்த வேண்டும்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |