Home » » ஸ்ரீலங்கா இராணுவத் தளபதிக்கு குடும்பத்துடன் தடை விதித்தது அமெரிக்கா! சுமந்திரன் சொல்வது என்ன?

ஸ்ரீலங்கா இராணுவத் தளபதிக்கு குடும்பத்துடன் தடை விதித்தது அமெரிக்கா! சுமந்திரன் சொல்வது என்ன?

இராணுவ தளதிபதி சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதானது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காகப் பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதை நாம் காண்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
"போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியத்தினுள் நுழைவதை அமெரிக்கா தடை செய்து கட்டளை பிறப்பித்துள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம்.
அதேவேளை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காகப் பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதை நாம் காண்கின்றோம்.
இலங்கை அரசு இனிமேலாவது சர்வதேச விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு இடம் கொடுக்க வேண்டும்.
"போரின் இறுதிக்கட்டத்திலே இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆக்கியவற்றுக்கான ஆதாரங்களின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் 58ஆவது பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா பொறுப்புக்கூற வேண்டியவராகின்றார்.
சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட வேளை மேற்குறித்த அதே காரணங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரது நியமனத்தைக் கண்டித்திருந்தது.
போர் முடிவடைந்து ஒரு தசாப்த காலமாகப் பொறுப்புக்கூறலைத் தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசுகளின் கண்களை இத்தடை திறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்" என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |