நூருள் ஹுதா உமர்-
கடற்கரை பிரதேசங்களில் துஸ்பிரயோகங்களுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. சம காலத்தில் இணைய பயன்பாடுகளினால் பிள்ளைகளை அதிகமாக கண்காணிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. என சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள கல்முனை பிராந்திய அலுவலக பொறுப்பதிகாரி டீ. மதியழகன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள கல்முனை பிராந்திய அலுவலக ஏற்பாட்டில் எம்.சி.எம். முனாஸ் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலயத்தில் இன்று (03) காலை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடைவிலகல் மற்றும் மாணவர்களின் போதைவஸ்து பாவனை தொடர்பிலான கருத்துரையை தேசிய அபாய ஒளடத கட்டுப்பாட்டுசபை உத்தியோகத்தர் எம்.எம்.ஜி. எம்.ரஸீட் நிகழ்த்தினார்.
தனது உரையில், நல்ல பிள்ளைகளாக எமது பிள்ளைகள் வளர வேண்டும் என ஆசைப்படும் நாங்கள் அதனை சரியாக செய்கிறோமா? என சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பிள்ளைகள் கேட்கும் விடயங்களை உடனே செய்யும் நாங்கள் அவர்களின் விடயத்தில் சரியாக இருப்பதில்லை. 4.5 இலட்சம் மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். சாதாரண தர மாணவ பருவத்தில் தான் அதிகமானவர்கள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் சம்பந்தமான பிரச்சினைகள் பற்றி தெளிவாக நாம் பேச எப்போதும் தயாராக இருப்பதில்லை. பெற்றோர்கள் பிள்ளைகளாக மாறி பிள்ளைகளின் பிரச்சினைகளை அணுக வேண்டும். மாணவர்கள் அதிக மனஅழுத்தம் வரும்போதெல்லாம் கூச்சப்படாமல் திறந்து பேசி அதை குணப்படுத்த ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments: