அம்பாறை திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் தாண்டியடி தங்கவேலாயுதபுரம் சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(06) காலை வேளையில் தனியார் பேருந்து, கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 12பேர் படுகாயமடைந்தள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது பொத்துவில் நகரில் இருந்து கல்முனை நகர் நோக்கி பயணித்துக் கொண்டு இருந்த தனியார் பேருந்து தங்கவேலாயுதபுரம் சந்தியில் கருங்கல் ஏற்றிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தின் பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த கனரக வாகனத்தில் பின்புற சில் வெடித்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளதாகவும் பொத்துவிலில் இருந்து பயணிகளை ஏற்றிவந்த தனியார் பேருந்து வேககட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுவதுடன் பேருந்தின் முன்பகுதி பாரிய சேதம் அடைந்துள்ளது.
இவ்விபத்தினைத் தொடர்ந்து திருக்கோவில் பொலிசாரின் அவசர நோய்காவு வண்டியின் மூலமாக காயமடைந்தவர்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
0 Comments