மட்டக்களப்பு- புதூர், திமிலைதீவுப் பகுதியில் வைத்து மோட்டார் போக்குவரத்து பொலீசாரிடம் இருந்து இனந்தெரியாத நபர்களினால் பறித்துச் செல்லப்பட்ட கைத்துப்பாக்கி சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கைத்துப்பாக்கி சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சற்று தூரத்தில் வீதியோரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துச் சென்றவர்கள் அதனை சற்று தூரத்திலேயே வீசிவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்த விசாரணைகளை மட்டக்களப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
மட்டக்களப்பு- புதூர், திமிலைதீவுப் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை தடுத்து நிறுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் நேற்று முயற்சித்துள்ளனர்.
எனினும், நிறுத்தாமல் சென்ற குறித்த இருவரும், எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் குவிந்த இளைஞர்கள் சிலர் போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸ் தரப்பினால் கூறப்படுகின்றது.
இதன்போது போக்குவரத்து பொலிஸாரின் கைத்துப்பாக்கியினை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடியுள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று பிற்பகல் வீதியோரத்தில் கிடந்த மேற்படி துப்பாக்கியை பொலீசார் மீட்டுள்ளனர்.
0 comments: