கல்முனை போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் நாளையதினம் கறுப்பு உடை அணிந்து தாங்களும் உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கவுள்ளதாகமகளிர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்றுடன் மூன்றாவது நாளாகவும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவருகின்றது.
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் பெருமளவான மகளிர் அமைப்புகளின் உறுப்பினர்களும் இளைஞர் அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது மகளிர் சங்க உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்
சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இலாபத்துக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவிடாமல் தடுத்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமையினால் கல்முனை வாழ் தமிழ் மக்கள் கடந்த மூன்று தசாப்தமாக மனவேதனையுடனேயே இருந்துவருவதாகவும் மகளிர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
காணி மற்றும் நிதி அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்காமல் அதன் மூலம் அவர்கள் இலாபமடைந்துவருவதாகவும் அதன் காரணமாகவே அதனை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு வழங்க தடைகளை ஏற்படுத்திவருவதாகவும் இங்கு சுட்டிக்காட்டினார்.

நாளையதினம் கறுப்பு உடை அணிந்து தாங்களும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இதில் அனைத்து மகளிர் அமைப்பு பிரதிநிதிகளையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்


0 Comments