கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் அதி முக்கியமான செய்தியினைச் சுமந்தவாறு சிரேஷ்ட அமைச்சர்கள் இருவர் அம்பாறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுகோரி பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சமயத் தலைவர்கள், இளைஞர்கள் என பலரும் உண்ணாப்போராட்டம் இருந்துவரும் நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அதிவிசேட செய்தியுடன் முக்கிய அமைச்சர்களும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் ஸ்தலத்திற்குச் சென்றுகொண்டிருப்பதாக அறியக்கிடைத்துள்ளது.
இதன்படி அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் தயா கமகே ஆகியோருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேற்படி உறுப்பினரும் சென்றுகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
குறித்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே தொடர்ந்தும் முரண்பாடுகள் நிலவிவரும் நிலையில் குறித்த இடத்தில் இருதரப்பினரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இது பாரிய இனக்கலவரத்துக்கு வழியேற்படுத்திவிடலாம் என்ற அச்ச சூழ்நிலை நிலவிவரும் நிலையிலேயே மேற்படி அமைச்சர்கள் போராட்ட களத்திற்குச் செல்வதாக சொல்லப்படுகிறது.
இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்மந்தனுக்குமிடையில் நடந்த நேற்றைய சந்திப்பின்போது பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments: