ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பிரதான பயற்சி இடமாகவும் உள்ளதாக நம்பப்படுகின்ற பயிற்சி முகாம் ஒன்று நேற்று அதிகாலை விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரினால் மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்டது.
காத்தான்குடி – ஒல்லிகுளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு சொந்தமான பயிற்சி முகாமில் இருந்து மேலும் பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.
15 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படும் இந்த பயிற்சி முகாமினுள் நான்கு மாடி கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு விவசாய பண்ணை போன்று பயிற்சி முகாம் நடத்தப்பட்டமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த முகாம் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹசீமுக்கு சொந்தமானது எனவும், இந்த முகாமில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி நடவடிக்கைகள் சாய்ந்தமருதில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய ரில்வான் ஹஷீமினால் நடத்தி செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரப்படையினரும் இணைந்து நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக சிரேஸ்ட காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில மீட்கப்பட்ட குண்டுகள் போன்ற குண்டுகள் அங்கும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பயிற்சி முகாமிற்கு, மொஹமட் சஹ்ரான் ஹசீம் பலமுறை வந்துள்ள நிலையில், குறித்த முகாமில் பயிற்சி பெற்ற வேளையே ரில்வான் ஹஷீமின் கைகளில் காயம் ஏற்பட்டு விரல்கள் இல்லாமல் போனதாக தெரியவந்துள்ளது.
0 Comments