Home » » குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்

குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்


குற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் சுமார் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்டுள்ளது.
நான்காயிரம் சிங்கள பௌத்த பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யும் வகையில் முஸ்லிம் மருத்துவர் ஒருவர் சிரேசரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக முன்னதாக திவயின பிரதான செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தி செய்தி நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டதுடன் அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில் இன்றைய தினம் திவயின மீண்டும் பிரதான செய்தியாக சிசேரியன் அறுவை சிகிச்சை தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் டொக்டர் ஷபி சிஹாப்டீன் என்பவர் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
8000 சிசேரியன் சிகிச்சைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக டொக்டர் சிஹாப்டீன், குருணாகல் வைதியசாலையின் பணிப்பாளர் முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார் என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் குறித்த மருத்துவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது 8000 சிசேரியன் சிகிச்சைகளை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் குருணாகல் பிராந்தியத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திசாநாயக்க குருணாகல் வைத்தியசாலை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை தொடர்பில் வெளியான செய்திகளைத் தொடர்ந்தும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக டொக்டர் சிஹாப்டீன், வைத்தியசாலை பணிப்பாளரிடம் பாதுகாப்பு கோரியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
போலி ஆவணங்களைத் தயாரித்து குழந்தைகளை விற்பனை செய்தல், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகளை மேற்கொள்ளல் ஆகிய சம்பவங்களுடன் இந்த மருத்துவருக்கு தொடர்பு உண்டு எனவும் குறுகிய காலத்தில் பாரியளவில் பணம் சம்பாதித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 8000 சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக குறித்த மருத்துவர் ஒப்புக்கொண்டதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்ட போதிலும் அதில் குடும்பக்கட்டுபாடு சிகிச்சை மேற்கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையொன்றில் பிறப்பினை கட்டுப்படுத்தும் வகையில் பாலோப்பியன் குழாயில் முடிச்சு ஒன்றை தனியொரு மருத்துவர் மட்டும் போடுவது மருத்துவ துறையில் நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |