நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு கைது செய்யும் அதிகாரம் உட்பட மேலதிக அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்,
வெல்லம்பிட்டிய ஆயுத தொழிற்சாலையில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக ஏன் அரசாங்கம் இன்னமும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் ஊடாக வழக்கு தாக்கல் செய்யவில்லை?
சில சந்தர்ப்பங்களில் சந்தேக நபர்களை கைது செய்கிறார்கள். ஆனால் அவர்கள் சாதாரண சட்டத்திலேயே நடத்தப்படுகிறார்களே தவிர பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவதில்லை.
கைது செய்யப்படும் சந்தேகநபர்களுக்காக அரசியல்வாதிகள் வக்காளத்து வாங்குகிறார்கள். ஒருசில நேரங்களில் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
எனவே இந்த நிலைமையை மாற்றுவதற்கு கைது செய்வதற்கான அதிகாரத்தை இராணுவத்திற்கு வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்கினால் அரசியல்வாதிகள் தலையீடு செய்வது நின்றுவிடும்.
அதேவேளை இஸ்லாமிய மதுரஸா கற்கை நிலையங்களில் 880 இனவாத ஆசிரியர்கள் கற்பித்திருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் இன்னமும் நாட்டிற்குள் இருக்கிறார்கள்? எத்தனை பேர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்கள்?
இராணுவத்தினரின் கணக்கெடுப்பிற்கு அமைய இன்னும் 150 முதல் 200க்கு உட்பட்ட சந்தேக நபர்கள் இருக்கின்றனர்.
இவர்களில் 85 பேர் உயிரிழந்தோ அல்லது கைது செய்யப்பட்டோ இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்
0 comments: