Home » » நில ஆக்கிரமிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் குறித்து அரசுடன் பேசுவோம்! - அமெரிக்க தூதுவர்

நில ஆக்கிரமிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் குறித்து அரசுடன் பேசுவோம்! - அமெரிக்க தூதுவர்

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் அரச திணைக்களங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், பௌத்த மயமாக்கல் குறித்து இலங்கை அரசுடன் அமெரிக்கா பொருத்தமான முறையில் பேசும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவா் அலெய்னா பி ரெப்லிட்ஸ் தெரிவித்தார்.
சமகால நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக யாழ். குடாநாட்டுக்கு வருகைதந்த அமெரிக்க துாதுவா் நேற்று மாலை யாழ். ஊடக அமையத்தில் அச்சு ஊடகங்களின் செய்தியாளா்கள் குழுவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது யாழ்.மாவட்டம் உள்ளடங்கலாக வடமாகாணத்தில் திட்டமிட்டவகையில் சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள், தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்ற அமைச்சுக்கள், திணைக்களங்கள் ஊடாக மக்களுடைய காணிகள் பறிக்கப்படும் சம்பவங்கள், மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்படுதல் போன்ற பிரச்சினைகள் குறித்து ஊடகவியலாளா்கள் அமெரிக்க தூதுவரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனா்.
இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்கத் தூதுவா் அலெய்னா பி ரெப்லிட்ஸ் இவ்வாறான விடயங்களை தமக்கு தெரியப்படுத்தியமைக்காக ஊடகவியலாளா்களுக்கு நன்றி தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்திற்கு பயணம் செய்து தாம் அடையாளப்படுத்தியுள்ள விடயங்களுடன் சோ்த்து இவ்வாறான விடயங்கள் தொடா்பாகவும் பொருத்தமான சந்தா்ப்பம் ஒன்றில், அரசாங்கத்துடன் நிச்சயமாக பேசுவேன் எனவும் அவர் கூறினார்.
மேற்படி அமைச்சுக்கள், திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைள் மற்றும் பௌத்த மயமாக்கல் நடவடிக்கைள், சிங்களக் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளா்கள் வெளிப்படுத்திய ஆவணங்களையும் ஆா்வத்துடன் பார்வையிட்டிருந்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |