Home » » ஜெனிவாவில் இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகள் காலஅவகாசம்!

ஜெனிவாவில் இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகள் காலஅவகாசம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கும் வகையிலான தீர்மான முன்வரைவு உறுப்பு நாடுகளின் பரிசீலனைக்காக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து, எதிர்வரும் 20ஆம் திகதியன்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளன. இதற்கான தீர்மான முன்வரைவு, “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில், ஜெனிவாவிலுள்ள பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில், நேற்று சுற்றோட்டத்துக்கு விடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த 2015ஆம் ஆண்டில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு, மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பேரவையின் கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ள இந்த வரைவில், 2021 மார்ச் மாதம், விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விரிவான அறிக்கையுடன், பேரவையில் விவாதம் ஒன்று நடத்தப்படும் என்றும் அந்த வரைவில் கூறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் இந்த வரைவில், 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |