சிறிலங்கா ஜனாதிபதியின் நடவடிக்கையானது இலங்கை-அமெரிக்க இருதரப்பு சினேகபூர்வ உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்று அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர் கிறிஸ்தோபர் வன் ஹொலன் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் குறித்த கடிதத்தை கிறிஸ்தோபர் வன் ஹொலன் அனுப்பியுள்ளதுடன் இலங்கையின் அரசியலமைப்பின்படி உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுமாறு கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டுநியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டுநம்பிக்கையில்லா பிரேரணைகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளுமாறும் ஹொலன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீ லங்காவுடனான தனது நீண்டகால நட்புறவை நினைவூட்டியுள்ள ஹொலன், சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் தலைவணங்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்காவில் கடந்த சில வாரங்களாக நடக்கும் சம்பவங்கள் ஸ்ரீலங்காவின் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய சவால் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
பதவியில் இருந்த பிரதமரை பதவியில் இருந்து நீக்கியமை, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமை, அவசர தேர்தலை அறிவித்தமை மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவுகளை ஏற்று கொள்ளாமை போன்ற விடயங்கள், ஸ்ரீலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராஜதந்திர தொடர்புகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் கிறிஸ் வென் ஹொலன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய நல்லிணக்க வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லுமாறும், 2015ஆம் ஆண்டுக்கு பின் ஸ்ரீலங்காவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்து காணப்பட்டதாகவும் ஹொலன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மேலும், கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான உறவில் நெருக்கம் ஏற்பட்டதாக கூறும் கிறிஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லிணக்க செயற்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்வதாக உறுதியளித்திருந்ததாகவும் சுட்டிக்காடியுள்ளார்.
இது தொடர்பான கடிதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
0 comments: