மலையத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து 29.11.2017 அன்று காலை முதல் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்து நோர்வூட் பகுதியில் 100ற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சுமார் 50ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலத்திலும், சிங்கள மகா வித்தியாலத்திலும் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இதே வேளை பொகவந்தலாவ பொலிஸ் பிரவுக்குட்பட்ட கொட்டியாகல செல்வகந்த ஆரியபுர, பொகவான, குயினா, ஆகிய பகுதிகளில் 29.11.2017 அன்று மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வீசிய கடும் காற்றினால் 200 இற்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.
சில வீடுகளின் கூரைகளில் போடப்பட்டிருந்த தகரங்கள் பல மீற்றர் தூரத்திற்கு வீசி எறியப்பட்டுள்ளன. மலையகத்தின் பல பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக 29.11.2017 அன்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பல வீதிகளின் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக 30.11.2017 அன்றும், 01.12.2017 அன்றும் மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
இதனால் 30.11.2017 அன்று காலை சில மாணவர்கள் பாடசாலைக்கு வந்து மீண்டும் வீடு திரும்பினர்.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் பொது போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
மலையத்தில் நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சிகாரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் மிக வெகுவாக உயர்ந்து வருகின்றன. இதனால் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் மகாவலி கங்கைக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொகவந்தலாவ டின்சின் பகுதியில் மரக்கறி தோட்ட காவலாலி ஒருவர் வெள்ள நீரில் சிக்குண்டு இருப்பதாக அறிவித்ததனையடுத்து அங்கு பொகவந்தலாவ பொலிஸார் அவரை காப்பாற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.





0 Comments