கிழக்கு மாகாணத்தில் உள்ள தபால் நிலையங்களில் கடமையாற்றும் தபால் ஊழியர்கள் தமக்கான சம்பள நிலுவையினை வழங்ககோரி இன்று திங்கட்கிழமை கவன ஈர்ப்பு போராட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர்.
மாகாண தபால் ஊழியர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவையை வழங்க கோரி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
2006ஆம் ஆண்டுக்கு பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு தபால் ஊழியர்களுக்கு 2010ஆம் ஆண்டு சம்பள குறைப்பை கடந்த அரசாங்கம் மேற்கொண்டபோதிலும் அது கிழக்கு மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் ஏனைய மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லையெனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
அதுமட்டுமன்றி 2006ஆம் ஆண்டு தொக்கம் 2010ஆம் ஆண்டு வரையில் அதிகளவான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு தொகை பணம் ஊழியர்களிடம் இருந்து மீளப்பெறப்பட்டிருந்தது.
இது தமக்கு கடந்த காலத்தில் செய்யப்பட்ட பெரும் அநீதி என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் இது கிழக்கு மாகாணத்தில் மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தபாலகங்களில் கடமையாற்றும் 104 பேருக்கு சுமார் 87 லட்சம் ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாகவும் அதன் அடிப்படையில் ஒருவருக்கு 4000 ரூபாய் முதல் 2,83500 வரையில் வேண்டியுள்ளதாகவும் அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சீ.உமேஸ்காந்த் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக மிக விரைவில் தங்களுக்கு உரிய சம்பளம் வழங்கவேண்டும் எனவும் தவறும் பட்ஷத்தில் தலைமை தபால் காரியாலயத்துக்கு முன்பாக தங்களது எதிர்ப்பை வெளிப்டுத்த நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு பிரதான தபால் திணைக்களத்தில் இருந்து பேரணியாக காந்தி சதுக்கத்துக்கு வந்து தொடர்ந்து திருமலை விதியாக கல்முனை வீதி வழியாக கிழக்கு மாகாண தபால் அத்தியட்சர் காரியாலயம் வரையில் சென்று மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.\





0 Comments