அரசாங்கப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு இலவசமாக இதுவரை வழங்கப்பட்டு வந்த வெள்ளை நிறச் சீருடைக்குப் பதிலாக, வர்ணத்திலான சீருடையொன்றை அறிமுகப்படுத்த, கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
மழை மற்றும் அதி கூடிய புழுதிக் காற்று வீசும் காலங்களிலும் பிற சந்தர்ப்பங்களிலும் வெள்ளை நிறச் சீருடை அணிவதில் மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக ஏற்கெனவே அபிப்பிராயங்கள் இருந்து வரும் நிலையில் கல்வியமைச்சின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாணவர்களுக்குள்ள விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த வர்ண நிறச் சீருடை மாற்றத்துக்கான நடவடிக்கை கவனத்தில் எடுக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
வெள்ளை நிறச் சீருடைகள், விரைவில் அழுக்கடைந்து விடுவதால், மாணவர்களில் பெரும்பாலானோர், விளையாட்டுக்களில் தமது திறமைகளை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.தங்களுடைய சீருடையை, அழுக்கடையாமல் வைத்திருக்கவே அவர்கள் விரும்புகின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்காக, ஒன்றிற்கு மேற்பட்ட நிறங்களை அறிமுகப்படுத்தி, அதில் விரும்பிய நிறத்தை, தமது பாடசாலை மாணவர்களுக்குப் பயன்படுத்துவதற்கான அனுமதியினை, பாடசாலைகளுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். வெள்ளைநிறச் சீருடையை அணியும் பாடசாலைகள், இலங்கையில் மாத்திரமே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 Comments