களுத்துறை சிறைச்சாலை பஸ்கள் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் பிரபல பாதாளகுழுக்களின் தலைவர்கள் இருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடுவலை பகுதியை சேர்ந்த பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள குழுவின் தலைவர் ஒருவரும் தெற்கில் செயற்படும் பாதாள குழுவொன்றின் தலைவர் ஒருவரும் இணைந்து திட்டமிட்டு குறித்த சூட்டு சம்பவத்தை நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் இதன்படி குறித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்களினூடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை எதனமடல பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலையிலிருந்து கடுவளை நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கொன்றில் ஆஜர்படுத்துவதற்கக சந்தேக நபர்களை சிறைச்சாலைக்கு சொந்தமான பஸ்ஸில் அழைத்துச் சென்ற வேளையில் சிறைச்சாலையிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் கெப் மற்றும் வானில் வழிமறித்து 15 பேர் கொண்ட குழுவினரால் அந்த பஸ்கள் நோக்கி சரமறியாக துப்பாக்கி சூட்டை நடத்தி பின்னர் அந்த பஸ்ஸுக்குள் சென்றும் துப்பாக்கி சூடுகளை நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் பஸ்ஸுக்குள் இருந்த சந்தேக நபர்களான பிரபல பாதாள உலக குழுவின் தலைவரான ”சமயங்” என்றழைக்கப்படும் அருண உதயசாந்த பத்திரன உள்ளிட்ட 5 கைதிகளும் மற்றும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். அத்துடன் மேலும் 4 சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்திருந்தனர்.
இது தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பொலிஸ் பிரிவுகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த விசாரணைகளின் போது பல்வேறு தகவல்களை பெற்றுக்கொண்ட பொலிஸார் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பிரதான பாதாள குழுக்களின் தலைவர்கள் இருவரை அடையாளம் கண்டுள்ளனர். இவர்களுக்கிடையே நீண்ட காலமாக காணப்பட்ட பகை இந்த சம்பவத்திற்கு காராணமா அல்லது வேறு விடயங்கள் இதனுடன் தொடர்புள்ளதா என பல கோணங்களில் விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் அவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கையெடுத்துள்ளனர். இதேவேளை இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வான் மற்றும் கெப் வண்டிகளும் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதனை அடிப்படையாக கொண்டும் பிரதேசத்தில் காணப்படும் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் பொறுத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வீ கமாரக்களை அடிப்படையாக கொண்டும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
0 comments: