நாட்டில் உள்ள பாதாள உலகக் குழுக்கள் மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளால், ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தின் பல முக்கிய உறுப்பினர்களுக்குக் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே வலியுறுத்தியுள்ளார்.
பாதாள உலகத்தால் ஏற்பட்ட ஆபத்து
நாட்டில் உள்ள பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தற்போதைய அரசாங்கம் கடுமையாகக் கையாண்டு வருவதன் காரணமாகவே அரசாங்கத் தரப்பினர்களுக்கு இவ்வாறான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பலருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். எனினும், நாட்டு மக்களே அவர்களின் உண்மையான பாதுகாவலர்களாக இருப்பார்கள்,” என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிக்கான எச்சரிக்கை
அத்துடன், பாதாள உலகக் குழுக்களுடனான அரசியல்வாதிகளின் தொடர்புகள் குறித்தும் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
“எதிர்க்கட்சி ஒரு பாதாள உலகக் குழுவிற்கு உதவினால், மற்றொரு பாதாள உலகக்குழு அவர்களை எதிர்க்கும். பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டவுடன், அதிலிருந்து தப்பிக்க முடியாது. அதிலிருந்து வெளியேற முற்பட்டால், உயிரைப் பறிகொடுக்க நேரிடும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
பொலிஸாரின் நிலைப்பாடு
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான பகுப்பாய்வுக்குப் பின்னர், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தமக்கு பாதுகாப்புத் தேவைப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது குறித்து எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க முடியும் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டார்


0 Comments