மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை தாங்களே கொலை செய்ததாக கருணா அணியின் பிரபல உறுப்பினர்களில் ஒருவரான சிந்துஜன் தன்னிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி ராஜ் கொலை வழக்கின் அரச சாட்சியாளருமான விஜய விக்ரம மனம்பேரிகே சம்பத் பிரீத்திவிராஜ் சாட்சியமளித்துள்ளார்.
ரவிராஜ் கொலை விவகாரம் தொடர்பில் நேற்று முன் தினம் கொழும்பு மேலதிக நீதிவான் திலின கமகே முன்னிலையில் இடம்பெற்ற சாட்சி குறுக்கு விசாரணைகளின் போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலான மேலதிக தகவல்களின் பின்னணி தொடர்பில் கருணா அணியின் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் இனிய பாரதியே அறிந்திருப்பதாக சிந்துஜன் தன்னிடம் தெரிவித்ததாகவும் விஜய விக்ரம மனம்பேரிகே சம்பத் பிரீத்திவிராஜ் மன்றில் தெரிவித்தார். இந்த சாட்சியத்தின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நான் பொலிஸ் உத்தியோகத்தராக 1996.01.09 அன்று உப சேவைகள் பிரிவூடாக உள்வாங்கப்பட்டேன். 2003 முதல் 2005 ஆம் ஆண்டு காலப்பகுதிவரை அப்போதைய கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நெவில் விஜேசிங்கவின் கீழ் நான் கடமையாற்றினேன். பின்னர் 2005 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் 2005 ஆம் ஆண்டு இறுதி வரை கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ரொஹான் அபே குணவர்தனவின் கீழ் கடமையாற்றினேன்.
அக்காலப்பகுதியில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அப்போது கிழக்கின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியாக கடமையாற்றிய கருணா அம்மானுடன் தொடர்புகளைப் பேணினார். அதற்கமைவாக பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அவரை சந்திக்க, பிள்ளையான், சிந்துஜன், சீலன், கார்த்தீபன் அல்லது புஷ்பகுமார், ராஜா ஆகியோர் வந்து சென்றனர். இதன் போது அவர்களுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அதன் படி அவர்களுடன் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் காரியாலயங்களை தாக்க எனக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக நான் அவர்களுடன் சென்று அதனை மேற்கொண்டுள்ளேன். மட்டக்களப்பு புலிகளின் காவலரண் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த நான் வெலிக்கந்தவுக்கு சென்று கருணா அணியின் இரு குழுக்களை அழைத்து வந்தேன். பின்னர் அவர்களுடன் சேர்ந்து தாக்குதலும் நடத்தினேன்.
இந் நிலையில் தான் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தான் உள்ளிட்ட குழுவினராலேயே கொல்லப்பட்டதாக கருணா அணியின் பிரபல உறுப்பினர் சிந்துஜன் என்னிடம் தெரிவித்தார். அந்த கொலை தொடர்பில் மேலதிக விபரங்களை கருணா அணியின் கிழக்குத் தலைவர்களில் ஒருவரான இனிய பாரதி என்பவர் முழுமையாக அறிந்திருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டு பொலிஸாருக்கு ரவிராஜ் கொலை தொடர்பில் நான் வாக்குமூலம் வழங்கிய போதும் அதில் உண்மையான தகவல்களை மறைத்தே வழங்கினேன்.
உண்மையைக் கூறினால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றே நான் உன்மைகளை மறைத்தேன். ஆனால் இப்போது அவ்வாறு அச்சமடைய வேண்டியதில்லை. அதனாலேயே இப்போது உண்மையைக் கூறுகின்றேன். என சாட்சியம் அளித்தார்.
இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நத்தார் ஆராதனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்ட பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வரும் நிலையில் அதற்காகவேண்டி பிள்ளையானும் கைது செய்யப்பட்டுள்ளார். இந் நிலையிலேயே நேற்று முன்தினம் ரவிராஜ் வழக்கில் பிரதிவாதிகள் சட்டத்தரணிகளின் குறுக்கு விசாரணையின் போது பரராஜசிங்கம் கொலை தொடர்பிலான சாட்சிகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
0 comments: