கிழக்கு பல்கலைக்கழக சுகாதார பாதுகாப்பு விஞ்ஞான பீடத்திற்காக கட்டிட தொகுதி ஒன்றை நிர்மானிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக சுகாதார பாதுகாப்பு விஞ்ஞான பீடம் 06 வகுப்புக்களை கொண்டு 2004 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டது. இந்த பீடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன் தற்போது ஐந்து தொகுதி மாணவர்கள் மருத்துவமானிப் பட்டத்தையும் சத்திர சிகிச்சைக் கற்கைநெறிப் பட்டத்தையும் பயில்கின்ற அதே வேளையில், நான்கு தொகுதி மாணவர்கள் விஞ்ஞான தாதியமைப் பட்டக் கற்கை நெறியையும் பயில்கின்றனர்.
தற்போதைய மாணவர் தொகை சுமார் 425 ஆகும். இந்த பீடமானது, தற்போது முன்னைய நெல் சந்தைப்படுத்தல் சபையிடமிருந்து எடுக்கப்பட்ட தற்காலிகமான கட்டடமொன்றில் செயற்பட்டு வருகின்றது. எனவே குறித்த பல்கலைக்கழக மாணவர்களுக்காக பொருத்தமான சூழல் ஒன்றை வழங்கும் பொருட்டு, கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு பல்கலைக்கழகக் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு கருத்திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது.
இந்தக் கருத்திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுச் செலவு 47.3 ஐக்கிய அமெரிக்க டொலர் (6,617.5 மில்லியன் ரூபா) ஆகும். குறித்த தொகையில் 34 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நிதியினை அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைட் நிதியம் வழங்க முன்வந்துள்ளது. அது தொடர்பான குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments: