ஐந்து இலட்சம் ரூபா பணம் தருவதாகக் கூறி இளைஞர் ஒருவரின் சிறுநீரகத்தை சிகிச்சை மூலம் பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் இளைஞருக்கு பணம் வழங்காமல் வௌிநாட்டுக்கு தப்பிச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ஹட்டன் – எபோஸ்ட்லி தோட்டத்தைச் சேர்ந்த ஜோன்ஸன் என்ற இளைஞரே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞன் கூறுகையில்,
பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நோயாளியை கவனித்துக் கொள்ளும் தற்காலிக பணியில் ஈடுபட்டு வந்தேன்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சிறுநீரகம் தேவைப்படுவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் கேட்டபோது அதற்கு குறித்த விருப்பம் தெரிவித்தேன்.
சிறுநீரகத்திற்குப் பதிலாக 5 இலட்சம் ரூபா பணம் தருவதாக குறித்த நபர் கூறியதால் குடும்ப கஸ்டத்தை மனதில் கொண்டு சம்மதித்தேன்.
கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கவைத்து பல்வேறு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் சிறுநீரகத்தை சிகிச்சை மூலம் பெற்றனர்.
பின் நான் வீட்டிற்குச் செல்வதற்கு வாகனமொன்றை தயார்படுத்திக் கொடுத்து எனது வங்கிக் கணக்கையும் தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.
வீட்டிற்குச் சென்றவுடன் வங்கிக் கணக்கிற்கு ஒப்பந்தம் செய்துகொண்ட 5 இலட்சம் ரூபா பணத்தை வைப்பிலிடுவதாக உறுதி அளித்தார்.
வீடு திரும்பிய பின்னர் வங்கிக் கணக்கை சோதித்த போது பணம் இருக்கவில்லை. பின் குறித்த நபரின் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்த போது தொலைபேசி செயலிழந்திருந்தது.
பின்னர் அந்த நபர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று விசாரித்தபோது, அவர் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரியவந்தது. தங்கியிருந்த வீட்டு உரிமையாளரிடம் நியாயம் கேட்டபோது அவர் என்னை திட்டி விரட்டிவிட்டார்.
சிறுநீரகம் ஒன்று இல்லாததால் பாரமான எந்த தொழிலிலும் ஈடுபட முடியாதுள்ளது. குடும்ப கஷ்டம் நீங்குவதற்கும், வருமானத்திற்காகவும் ஏதாவது ஒரு தொழிலை செய்வதற்கு எதிர்பார்க்கிறேன்.
சிறுநீரகம் கொடுத்துவிட்டு ஏமாறியதால் பிரதேசத்திலுள்ள மற்றையவர்கள் என்னை கேலி செய்கின்றனர்´ என ஜோன்ஸன் கவலை வெளியிட்டுள்ளார்.
0 Comments