பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 237 ஆக உயர்த்தும் வகையில் அமைந்துள்ள புதிய தேர்தல் முறை யோசனையை உள்ளடக்கிய 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்குஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அந்தவகையில் தொகுதிகளின் அடிப்படையில் 145 எம்.பி. க்களும் மாவட்ட விகிதாசாரஅடிப்படையில் 55 பேரும் தேசிய பட்டியல்மூலம் 37 எம்.பி.க்களும் தெரிவு செய்யப்படும் வகையில் புதிய தேர்தல் முறை யோசனைதயாரிக்கப்பட்டு அங்கீகாரத்தை பெற்றுள்ளது.விருப்பு வாக்கு முறை முற்றாக நீக்கப்படுகின்ற தொகுதி மற்றும் விகிதாசார முறைமைகள் அடங்கியதாக புதிய கலப்பு தேர்தல் முறை முன்வைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்தில் கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதியினால் திருத்தப்பட்ட தேர்தல் முறை மாற்ற யோசனை முன்வைக்கப்பட்டதுடன் அதற்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.அந்தவகையில் அரசியலமைப்பின் 20 ஆவதுதிருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங் கீகாரம் கிடைத்துள்ள நிலையில் அதனை இன்றைய தினம் வெளிவரவுள்ள வர்த்தமானியில் வெளியிடவும் ஏற்பாடாகியிருந்தது.புதிய தேர்தல் முறை யோசனையை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான பணிகள் நேற்றுஇரவு முன்னெடுக்கப்பட்டிருந்தன.மேலும் புதிய தேர்தல் முறைசட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையும் கோரப்படவுள்ளது.அத்துடன் இன, அரசியல், பொருளாதார, சமூக பன்மை தன்மை யதார்த்தத்தை பிரதிபலிக்கும் முகமாக தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழு செயற்படவேண்டும்” என்றும் இந்த யோசனையில் குறிப்பிடப்பட்டள்ளது.குறிப்பாக ஒரு மாவட்டத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை இனத்தைவிட மாற்று இன, மத ரீதியான சிறுபான்மை மக்கள் வாழும் பட்சத்தில் அவர்களது பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் முகமாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவானது புதிய தொகுதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான அமைச்சரவை ஆவணம் உறுதிபடுத்தியுள்ளது.இதேவேளை கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்ட தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு சிறுபான்மை மற்றும் சிறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. பின்னர் அதனை மேலும் திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.குறிப்பாக கடந்த திங்கட்கிழமை முன்வைக்கப்பட்ட தேர்தல் திருத்த யோசனையில் 125 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மூலமும் 75 உறுப்பினர்கள் விகிதாசார ரீதியிலும் 25 உறுப்பினர்களை தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யும் வகையிலும் 225 உறுப்பினர்களை கொண்டதாக ஏற்பாடுகள் காணப்பட்டன. ஆனால் இதற்கு பாரிய எதிர்ப்பு கிளம்பியதால் அதனை மேலும் திருத்தி புதிய தேர்தல் முறை நேற்று முன்வைக்கப்பட்டது.குறிப்பாக நேற்று முன்தினம் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் கொழும்பில் கூடி தேர்தல் முறை மாற்றம் குறித்து ஆராய்ந்ததுடன் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது குறித்தும் ஆராயப்பட்டது. இந்நிலையில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்திலிருந்து தேர்தல் முறை மாற்றத்தை உருவாக்குவது குறித்து பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இது தொடர்பில் ஆராய்ந்து அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெற்று தேர்தல் முறையை தயாரிக்க அமைச்சரவை உப குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.இந்த அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, எஸ்.பி. திசாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, கபீர் ஹஷீம், சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக்க, பழனி திகாம்பரம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர்.இந்த உறுப்பினர்கள் பல தடவைகள் கூடி தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்து சில வாரங்களுக்கு முன்னர் தமது வரைபை முன்வைத்திருந்தனர்.ஆனால் அதற்கும் உடனடியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதன் பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் களத்தில் இறங்கி தேர்தல் முறை மாற்ற யோசனையை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.இந்நிலையில் ஆரம்பத்தில் 255 உறுப்பினர்களை கொண்டு தேர்தல் முறை மாற்றத்தை தயாரிக்கவே யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதாவது 196 உறுப்பினர்களை மாவட்ட ரீதியிலும் 59 உறுப்பினர்களை தேசிய பட்டியல் ரீதியிலும் தெரிவு செய்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது.ஆனால் பாராளுமன்ற ஆசனங்கள் 255 ஆக உயர்வதை பல கட்சிகள் எதிர்த்தன. இந்நிலையில் வாரக்கணக்கில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இறுதியில் தற்போதைய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் 237 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரமே தற்போது நடைமுறையில் இருக்கும் விகிதாசார தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவின் காலத்தில் இந்த தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் ஆரம்பகாலத்திலிருந்தே தற்போதைய தேர்தல் முறைமையில் காணப்படும் விருப்பு வாக்கு முறைமையை பல தரப்பினர் எதிர்த்து வந்தனர்.இதற்கு முன்னர் புதிய தேர்தல் முறையை தயாரிக்கும் வகையில் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு யோசனைகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் அவை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் காணப்பட்டன. இந்நிலையிலேயே தற்போதைய புதிய முறை வந்துள்ளது.ஆனால் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவரப்படவுள்ள புதிய தேர்தல் முறை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் புதிய முறையில் நடத்தப்படுமா என்று இதுவரை அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments