கொக்கட்டிச் சோலையில் வெளிமாவட்ட சிங்கள மீனவர்கள் இறால் வளர்க்க அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 7ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அக்கூட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் மண்முனை வாவியை அண்டிய முதலைக்குடா மகிழடித்தீவு கிராம சேவையாளர் பிரிவுகளில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் இறால் பண்ணைகளை அமைப்பதை உடன்நிறுத்தி அப்பகுதியில் உள்ள மக்கள் இறால் பண்ணைகளை நடாத்த அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இதை மட்டக்களப்பு மாவட்ட அவிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த மகிந்த அரசின் காலத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் முரளிதரன் சிலாபத்தில் உள்ள சிங்களவர்களுக்கு எந்தவித முறையான அனுமதிகளுமின்றி பட்டிப்பளை பிரதேச செயலாளரின் அனுமதியை முறைகேடான வகையில் கள்ள கையொப்பம் இட்டு பத்திரம் தயாரிக்கப்பட்டு இறால் பண்ணைகள் செய்யப்பட்டுள்ளது.
இது ஊழல் நடவடிக்கையாகும். இனிமேல் கொக்கட்டிச் சோலைப் பகுதியில் உள்ளவர்கள் இறால் பண்ணைகளை அமைக்க முன்வருவோருக்கு மாத்திரமே அனுமதி வழங்கவேண்டும். வெளிமாவட்டத்தை சேர்ந்த சிங்களவர்கள் எமது வளத்தை சுரண்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது எனவும் அரியம் எம்.பி மேலும் தெரிவித்தார்.
0 Comments