Home » » யாழ், மட்டக்களப்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றம்! - வியாழன் முதல் நடைமுறைக்கு வருகிறது

யாழ், மட்டக்களப்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றம்! - வியாழன் முதல் நடைமுறைக்கு வருகிறது

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு செல்லும் ரயில் சேவைகளின் நேரங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் 2ம் திகதி முதல் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ். - கொழும்பு புகையிரத சேவையில் எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதான அதிபர் வ. பிரதீபன் தெரிவித்தார்.
  
காலை 7.10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு செல்லும் யாழ்தேவி புகையிரதம் காலை 6.30 மணிக்கு யாழில் இருந்து புறப்படவுள்ளது. அதேவேளை, காலை 11.00 மணிக்கு யாழில் இருந்து செல்லும் நகர் சேர் கடுகதி 10.10 மணிக்கு புறப்படும் அதேநேரம், இரவு நேர தபால் 7.05 ற்கு சென்ற புகையிரதம், இரண்டாம் திகதி முதல் இரவு 7.00 மணிக்கு தனது பயணத்தினை ஆரம்பிக்கும்.
அதேநேரம், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 7.15 ற்கு வருகை தரும் யாழ்தேவி புகையிரதம் 6.05ற்கு அங்கிருந்து தனது பயணத்தினை ஆரம்பிக்கும். கொழும்பில் இருந்து 6.15 ற்கு பயணத்தினை ஆரம்பிக்கும் இரவு தபால் பிகையிரதம் எதிர்வரும் 01ம் திகதியில் இருந்து 8.40 மணிக்கு புறப்படும். காலை 5.50 மணிக்கு பயணத்தினை கல்கிஸ்ஸையில் இருந்து ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி புகையிரதம் 5.45 மணிக்கு கல்கிஸ்ஸையிலிருந்து புறப்படும்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும், 10.00 மணிக்கு யாழிலிருந்து புறப்படும் புகையிரதம் இரண்டாம் திகதிக்குப் பின்னர் காலை 9.10 மணிக்கு யாழில் இருந்து புறப்படுமென்றும் யாழ். புகையிரத பிரதான அதிபர் மேலும் கூறினார்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி காலையில் 7.15 மணிக்கு புறப்படும் உதய தேவி புகையிரதம் 7.30 க்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். காலை 10.30 க்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்தி நோக்கி புறப்படும் புகையிரதம் காலை 11.30 க்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மாகோ சந்தியை சென்றடையும்.
மட்டக்களப்பிலிருந்து மாலை 5.45 க்கு புறப்படும் பிரயாணிகள் புகையிரதம் மாலை 5.30 க்கு புறப்பட்டு கல்லோயா சந்தியில் திருகோணமலையிலிருந்து வரும் புகையிரதத்துடன் இணைக்கப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். அதுபோல் வழமையாக இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் பாடு மீன் நகர கடுகதி சேவை புகையிரதம் 8.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.10 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி காலை 6.10 க்கு வரும் புகையிரதம் 7.15 க்கு புறப்பட்டு 4 மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும். இரவு 7.15 மணிக்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் புகையிரத நேரத்தில் மாற்றம் இல்லை அது அதிகாலை 4.12 மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும். கொழும்பிலிருந்து இரவு 9 மணிக்கு திருகோணமலை, மட்டக்களப்பு நோக்கி புறப்படும் புகையிரதம் 9.45 மணிக்கு புறப்பட்டு 7.10 மணிக்கு மட்டக்களப்பை வந்து சேரும்.
மாகோவிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் புகையிரதம் மட்டக்களப்பிற்கு மதியம் 1.35 மணிக்கு வந்து சேரும். மட்டக்களப்பிலிருந்து காலை 5.10 க்கு புறப்படும் புகையிரத பஸ் கல்லோயாவில் 9.02க்கு சென்றடையும் மீண்டும் அதே புகையிரத பஸ் வண்டி கல்லோயாவிலிருந்து மதியம் 1.30க்கு புறப்பட்டு மட்டக்களப்பிற்கு மாலை 4.55க்கு வந்து சேரும் எனவும் புகையிரத நிலைய அதிபர் ஏ.எல்.எம். அலீவா மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |