Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

போர் வெற்றியைக் காரணம் காட்டி குற்றமிழைத்த எவரும் தண்டனையில் இருந்துப்பிக்க முடியாதுசோபித தேரர்

இறுதிப் போரில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த உண்மைகள் கண்டறியப்படுவது நல்ல விடயம். போர் வெற்றியைக் காரணம் காட்டி குற்றமிழைத்த எவரும் தண்டனையில் இருந்து தப்பிக்கவோ அல்லது தண்டனை வழங்கப்படாமலோ இருக்க முடியாது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.
உண்மையைக் கண்டறிவதன் மூலமாக இவ்விடயத்தில் தெளிவைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாப்பரசர் முதற்கொண்டு உலகத் தலைவர்கள் பலரும் உண்மையைக் கண்டறிய வேண்டும் என தெரிவித்த கருத்துடன் உடன்படுவதாகத் கூறிய சோபித தேரர், மறைப்பதற்கு இவ்விடயத்தில் ஏதுமில்லையல்லவா என்றும் தெரிவித்தார்.

இறுதிப்போரில் போர்க்குற்றங்கள் உட்பட பாரிய மனித உரிமைமீறல்கள் இடம்பெற்றதான குற்றச்சாட்டுக்கள் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இலங்கை மீது சர்வதேச அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது. இந்நிலையில், இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் உட்பட உலகத்தலைவர்களும் இறுதிப்போரில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்விடயத்தில் நிலைப்பாடு என்னவென்று சோபித தேரரிடம் வினவியபோது, “உண்மைகள்கள் கண்டறியப்படுவது நல்ல விடயமே. உண்மைகளைக் கண்டறிவதனூடாக நாம் தெளிவுபெறமுடியும்” என்று குறிப்பிட்டார்.
போர் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என சில தரப்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து வினவியபோது, “போர் வெற்றிக்கான கௌரவம் அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், அவர் மட்டுமே போர் வெற்றிக்கு காரணமல்ல. அப்படியென்றால் சரத் பொன்சேகா தேங்காய் உரித்துக் கொண்டிருந்தாரா? போர் வெற்றியைப் பெற்றதற்காக வேறு குற்றங்களை இழைத்திருந்தால் தண்டனை வழங்காது இருக்க முடியாது. போதுமான சாட்சியங்கள் இருக்குமிடத்தில் குற்றச்சாட்டுக்களுக்கு தராதரம் பார்க்காது தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments