“கிழக்குப் பிராந்தியத்திலிருந்து வறுமைக்குட்பட்ட எந்தப் பெண்களும் வீட்டுப் பணிப்பெண்களாக மத்தியகிழக்கு நாடுகளுக்கு போகக் கூடாது என்பதே எனது இலக்கு என்று கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூரில் 500 விதவைகளுக்கு உலருணவுப் பொதிகளும் மேலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏறாவூர் காட்டுப்பள்ளி குல்லிய்யத்து தாறில் உலூம் அறபுக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தில் அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அவ்வாறு வேறேதும் தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்வதாக இருந்தால் அது பயிற்றப்பட்ட உயர் தொழில் ஆற்றல்களோடு கூடிய தொழில் வாய்ப்புக்களுக்காகவே அவர்களை அனுப்ப வேண்டும்.கல்வியலாளர்களாக அல்லது மருத்துவத் தாதிகளாகவே இனி வரும் காலங்களில் மத்திய கிழக்கு செல்வதற்கு நாம் இங்குள்ளவர்களை உருவாக்க வேண்டும். வெறுமனே அடுப்பங்கரை வேலை செய்யும் அடிமைகளாக அறபு தேசங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.
இன அடிப்படையில், முஸ்லிம்கள் என்ற வகையில் கடந்த காலப் பயங்கரவாதத்தின் இலக்காக இந்த ஏறாவூர் இருந்தது. அதனால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இந்த ஊர் திறந்த வெளி அகதி முகாமாக மாறியிருந்தது. ஒரே இரவில் 162 பேர் வெட்டியும், குத்தியும், அடித்தும், தீயிட்டும் கொளுத்தப்பட்டிருந்தார்கள்.
அந்நேரத்தில் பலர் விதவைகளாக்கப்பட்டார்கள். ஏறாவூரில் தற்போது 2000 ஆயிரம் பேர் விதவைகளாக உள்ளார்கள். ஏறாவூர் மக்களை எங்கோ ஒரு பகுதிக்கு விரட்ட வேண்டும் என்பதற்காக பயங்கரவாதிகள் இந்த ஊரைச் சூழ்ந்திருந்து மாதக்கணக்கில் தாக்கிய இருள் சூழ்ந்த காலமொன்றிருந்தது. தொழிலுக்குச் செல்ல முடியாத அகதி முகாம் வாழ்க்கையாக நாட்கள் நகர்ந்தன. அதனாலேயே பல பெண்கள் இங்கிருந்து தமது வாழ்வாதாரத்தைத் தேடி வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்கிற்குப் புறப்பட்டார்கள்.
இனிமேல் இந்த நாட்டில் இந்த இரண்டு சூழ்நிலைகளும் உருவாகக் கூடாது. அதாவது பயங்கரவாதம் தலையெடுக்கவும் கூடாது. பெண்கள் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாகவும் செல்லக் கூடாது.
எங்களது கடமை பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடில்லாமல் அவர்களை பாதிப்புக்களிலிருந்து மீட்டெடுப்பதேயாகும். எதிர்காலத்தில் இந்த ஊரை ஒரு நவீன தொழிலுற்பத்திப் பேட்டையாக மாற்றுவதே நோக்கமாகும்.
யாரும் பிறரின் உதவியில் தமது வாழ்வாதாரத்திற்காக தங்கியிருக்காத நிலைக்குக் கொண்டு வரவேண்டும். நிவாரணங்களையும் இன்ன பிற உதவிகளையும் எதிர்பார்த்திருக்காத சொந்தக் காலில் நின்று உழைக்கக் கூடிய மக்களாக இவர்களை மாற்ற வேண்டும். அடுத்த வருட றமழான் நோன்பிற்கிடையில் இந்த ஊரில் குறைந்தபட்சம் பல்வேறு விதமான நான்கு தொழிற்சாலைகள் இயங்கும். அதில் பலநூறு பெண்களும் ஆண்களும் தொழில் வாய்ப்பைப் பெறுவார்கள்” என்றார்.
கொடை வள்ளல்களும் முதலீட்டாளர்களுமான இந்தியாவைச் சேர்ந்த ராஜசேகர் ரெட்டி, லண்டனைச் சேர்ந்த கலாநிதி முஹம்மத் ஹரீஸ் ஸைனுலாப்தீன் சவூதி அரேபியா மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஷெய்க் அப்துல்லாஹ் ஷெய்த் அல் மலெய்ஹி இலங்கையைச் சேர்ந்த கே. சுரேந்திரா, ஹமீடியா முகாமையார் பாயிஸ் அலவி ஆகியோர் உட்பட ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா மற்றும் இன்னும் பல பிரமுகர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Comments