பெசன்ட்நகர் கடற் கரையில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக இன்று காலை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அடையாறு சாஸ்திரிநகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சுடிதார் அணிந்து காணப்பட்ட அந்த பெண்ணின் கழுத்து துப்பட்டாவால் இறுக்கப் பட்டிருந்தது. கழுத்தை நெரித்து அவரை யாரோ கொலை செய்துள்ளனர். கொயுண்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் ராயப்பேடை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை அறையில் இளம் பெண்ணின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் செல்போன் ஒன்றையும் போலீசார் கண்டெடுத் துள்ளனர். அதனை வைத்து கொலையுண்ட பெண்ணை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அவரை யார் கொலை செய்தார் தெரியவில்லை. சம்பவ இடத்தில் மல்லிகை பூக்களும் சிதறி கிடந்தன. எனவே கொலை செய்யப்படும் போது இளம்பெண் கடுமையாக போராடி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அதே நேரத்தில் கொலையுண்ட பெண் கற்பழிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இது பற்றி போலீசிடம் கேட்ட போது பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர்தான் அது பற்றி தெரிய வரும் என்று கூறினார்கள்.
போலீஸ் விசாரணையில் அங்கு கிடந்த போன் கொலையுண்ட இளம் பெண்ணுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. அவரது பெயர் நித்தியா (23). இவர் அடையாறு புற்று நோய் சிகிச்சை மையத்தில் உள்ள கேன்டீனில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது தந்தை விஜயகுமார் அடையாறு புற்று நோய் சிகிச்சை மையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி ராஜேஸ்வரி மற்றும் 2 மகள்களுடன் கோட்டூர் புரம் பெருமாள் கோவில் தெருவில் குடியிருக்கிறார்.
கடற்கரையில் பிணமாக கிடந்த நித்தியா அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் உள்ள கேன்டீனில் டீ மாஸ்டராக வேலை பார்த்த ஏழுமலை (28) என்பவரை 3 வருடங்களாக காதலித்து வந்தார். இந்த நிலையில் நித்யா வேறு ஒருவருடன் பழகுவதாக ஏழுமலை சந்தேகப்பட்டார். இதன் காரணமாக நித்யாவிடம் ஏழுமலை அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்டுகிறது. நித்யாவின் வீட்டுக்கு சென்று பெற்றோரிடமும் வாக்கு வாதம் செய்துள்ளார். அதற்கு நித்யாவின் பெற்றோர், ’நித்யாவின் அக்காவுக்கு திருமணம் முடிந்த பிறகுதான் நித்யா திருமணம்பற்றி பேச முடியும்’ என்று கூறி விட்டனர். காதலை கைவிடும்படி நித்யாவுக்கும் அறிவுரை கூறினார்கள்.
இந்தநிலையில், ஏழுமலை நேற்று நித்யாவை பெசன்ட் நகர் வரும்படி அழைத்தார். உடனே நித்யா அவரது பெற்றோரிடம், இன்று ஏழுமலையை சந்தித்து அவர் சிம்கார்டை அவரிடமே திருப்பிக் கொடுக்கப்போகிறேன். அவருக்கும் எனக்கும் இனி எந்தவித தொடர்பும் இல்லை என்று சொல்லி விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார்.
ஆனால் இரவு வெகு நேரம் ஆன பிறகும் நித்யா வீடு திருமபவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அப்போது பெசன்ட் நகர் கடற்கரையில் இளம் பெண் உடல் கிடந்த தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பிணவறையில் இருந்த உடலை கண்ட பெற்றோர் அது நித்யா தான் என்பதை உறுதி செய்தனர்.
காதலை கைவிடும்படி நித்யா கூறியதாலும், நித்யா மீது ஏழுமலைக்கு சந்தேகம் இருந்ததாலும் கடற்கரையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏழுமலை கொலை வெறியுடன் நித்யாவை அவரது துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் நித்யா உயிருக்கு போராடிய போது ஏற்பட்ட கால் தடங்கள், தலை தரையில் மோதியதால் அவரது தலையில் இருந்து கீழே உதிர்ந்த மல்லிகைப்பூ சிதறல்கள் ஆகிய கொலைக்கு முக்கிய தடயங்களாக உள்ளன.
நித்யாவின் காதலன் ஏழுமலை தலைமறைவாகி விட்டார். அவர் சொந்த ஊர் புதுச்சேரி என்றும், ராமநாதபுரம் என்றும் கேன்டீனில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.
அவரைப் பிடிக்க புதுச்சேரி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.
0 comments: