வடக்கு கிழக்கு மாகாணங்களில் கலாசார சீர்கேடுகள் அதிகளவில் காணப்படுகின்றன. எமது தமிழ் சமூகம் திட்டமிட்டு கலாசார சீர்கேடுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றது’ என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கூழாவடி இந்து இளைஞர் ஒன்றியத்தின் 23ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அரியநேந்திரன் எம்.பி, ‘இக்கால கட்டத்தில் சயம, சமூக, விழுமியங்கள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் முக்கிய காரணமாக திகழ்வது தொலைக்காட்சிப் பெட்டி இந்த தொலைக்காட்சி பெட்டிகள் அதில் இடம்பெறுகின்ற நிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்றன சமுகத்தில் பின்னடைவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன’ என்றார்.
‘தொலைக்காட்சித் தொடர்களில் காட்டப்படுகின்ற குடும்பங்களுக்கிடையிலான குரோதக் காட்சிகளின் தாக்கங்கள் செங்கலடி வரை சென்றதை நாம் எல்லோரும் அறிந்தவையே. அதனால் இவற்றில் நல்ல விடயங்கள் இல்லை என நான் குறிப்பிடவில்லை. நல்ல விடயங்களும் இருக்கின்றன. ஆனால் நாம் அதனை பார்க்க தவறுகின்றோம். அவற்றிற்கு நாம் ஆர்வம் காட்டுவதில்லை. இதுதான் நம்மில் உள்ள பிரச்சினை.
தற்போது எமது சமூக, கலாசார விழுமியங்களும் சீரழிந்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எமது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கலாசார சீர்கேடுகள் அதிகளவில் காணப்படுகின்றன. எமது தமிழ் சமூகம் திட்டமிட்டு கலாசார சீர்கேடுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றது’ என்று அரியநேந்திரன் எம்.பி மேலும் குறிப்பிட்டார்.
0 comments: